அரசு பாடநூல் புத்தகங்களுக்கான விலை நிர்ணயம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2012

அரசு பாடநூல் புத்தகங்களுக்கான விலை நிர்ணயம்.

 தமிழகம் முழுவதும் அரசு பாடநூல் புத்தகங்களை, தனியார் பள்ளிகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்வதற்கு விலை நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் வகுப்பிற்கு 200 ரூபாயும், 8ம் வகுப்பிற்கு 300 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து விடப்படுகிறது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதம் முதல் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்ளிட்டவற்றிற்கு அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் சொந்த பணத்தில் புத்தகம் வாங்கி கொள்ள வேண்டும். தனியார் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் எவ்வளவு மாணவ, மாணவிகள் இருக்கிறார்களோ அவர்களது எண்ணிக்கைக் ஏற்ப தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனத்தில் மொத்தமாக பணம் கட்டி தங்களுக்கு தேவையான புத்தகத்தை வாங்கிக் கொள்வர். ஜூன் மாதம் முதல் தேதி பள்ளி திறக்கும் அன்றே மாணவர்கள் கையில் புத்தகம் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவு உள்ளதால் அதற்கு முன்பாக பள்ளிகளுக்கு புத்தகம் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மே மாதம் முதல் வாரத்திற்குள் அனைத்து புத்தகங்களும் வந்துவிடும். அதனை அந்தந்த மாவட்டங்களில் இருந்து பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்குரிய புத்தகங்களை மே மாதம் இரண்டாவது அல்லது 3வது வாரத்திற்குள் எடுத்து செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான செலவு அரசால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மட்டுமே மேற்கண்ட உத்தரவு பொருந்தும். தனியார் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகம் விலை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக இந்த முறை பாடப்புத்தகம் மூன்று பருவமாக, மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்கும் வகையில் மூன்று பிரிவாக புத்தகம் வழங்கப்படுகிறது. இது சம்பந்தமாக அரசாணை எண் 55ல் கூறப்பட்டிருப்பதாவது; 1ம் வகுப்புக்குரிய புத்தக செட் ரூ. 200. முதல் பருவத்திற்குரிய புத்தகம் 60 ரூபாய், இரண்டு மற்றும் மூன்றாம் பருவத்திற்குரிய புத்தகம் தலா 70 ரூபாய். இரண்டும் சேர்த்து மொத்தம் 200 ரூபாயாகும். 2ம் வகுப்பிற்கும் 1ம் வகுப்புக்குரிய புத்தக விலைதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3ம் வகுப்புக்குரிய புத்தக செட் ரூ. 250. முதல் பருவத்திற்குரிய புத்தகம் 80 ரூபாய். இரண்டு மற்றும் மூன்றாம் பருவத்திற்குரிய புத்தகம் தலா 85 ரூபாய். இரண்டும் சேர்த்து மொத்தம் 250 ரூபாய். 4 மற்றும் 5ம் வகுப்பிற்கும் 3ம் வகுப்புக்குரிய புத்தகத்திற்குரிய 250 ரூபாய் விலை தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6ம் வகுப்புக்குரிய புத்தக செட் 250 ரூபாய்தான் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் புத்தக செட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் பருவத்திற்கு இரண்டு புத்தகங்கள் தலா 40 ரூபாய் விலையிலும், இரண்டாம் பருவத்திற்கும், மூன்றாம் பருவத்திற்கும் தலா இரண்டு புத்தகங்கள் ஒரு புத்தகம் 40 ரூபாயிற்கும், இன்னொரு புத்தகம் 45 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. மொத்தம் 6 புத்தகம் ( ரூ.40+40, 40+45, 40+45) என்ற நிலையில் 250 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புக்குரிய புத்தகமும் 6ம் வகுப்பு போல் ஒரு பருவத்திற்கு 2 புத்தகங்கள் என்ற அளவில் முதல், இரண்டு, மூன்று ஆகிய பருவத்திற்கு தலா இரண்டு புத்தகங்களாக (ரூ.50+50) என்ற அளவில் முதல், இரண்டு, மூன்றாம் பருவத்திற்கு தலா 100 ரூபாய் வீதம் 300 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி