2,600 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை: கல்வித்துறை எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2012

2,600 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை: கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளிக்கல்வித் துறை, மெட்ரிகுலேஷன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை ஆகிய மூன்று துறைகளின் கீழ் 2,600 பள்ளிகள் வரை, அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது தெரிய வந்துள்ளது.இந்தப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லாததால், இவற்றில் பயிலும் மத்திய அரசுஊழியர்களின் குழந்தைகளுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.மத்திய அரசில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் முதல், மேலதிகாரிகளின் குழந்தைகள் வரை, அனைத்து குழந்தைகளுக்கும், ஆண்டுதோறும், கல்வி (சி.இ.ஏ., சென்ட்ரல் எஜுகேஷனல் அலவன்ஸ்)உதவித்தொகை வழங்கப்படுகின்றன. முதல் வகுப்பில் துவங்கி, பிளஸ் 2 வரை, இந்த கல்வி உதவித்தொகையை பெறலாம்.மொழி, இனப் பாகுபாடின்றி, அரசுமற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைவரும், இந்த கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றவர். கடந்தாண்டு வரை,12 ஆயிரம் ரூபாயாக இருந்த, கல்வி உதவித்தொகை, தற்போது, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிலும், மாணவ, மாணவியர் மட்டுமே, இந்த கல்வி உதவித்தொகையை பெற முடியும். ஓராண்டில், நான்கு தவணை அல்லது ஆண்டு இறுதியில், ஒரே தவணையாகவும் உதவித்தொகையை பெறலாம்.பள்ளிக் கட்டணம், சீருடை, டியூஷன் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்தியதற்கான ரசீதுகளை பெற்று, அதை, பணியாற்றும் துறையின் கணக்குப் பிரிவில் சமர்ப்பித்து, அத்தொகையை, ஊழியர் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, பள்ளியின் அங்கீகாரம்மிக முக்கியம்.கடந்த, 2009ல், அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.அதன்படி, தனியார் நர்சரி, பிரைமரி, நிதியுதவி, சுயநிதி பள்ளிகள் அனைத்தும், தன் அங்கீகாரத்தை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு, அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்ட பள்ளியில்படிக்கும் மாணவ, மாணவியருக்குமட்டுமே கல்வி உதவித்தொகை கிடைக்கும்.ஆனால், பள்ளிக் கல்வித்துறையின் கீழ், 1,000 பள்ளிகளும், மெட்ரிகுலேஷன் இயக்குனரகத்தின்கீழ், 600 பள்ளிகளும், தொடக்கக் கல்வித்துறையின் கீழ், 1,000 பள்ளிகளும், அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இயங்கி வருவதாக, சம்பந்தப்பட்ட துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இதனால், இப்பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.கல்வி உதவித்தொகை பெற முடியாதசிலர் , தகவல் அறியும் உரிமை சட்டத்தில், இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, அங்கீகாரம் பெறாத பள்ளிகள் குறித்த தகவல் தெரியவந்தது.தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறும்போது, "சேலம் மாவட்டத்தில், 24 பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை. புதுப்பிக்க விண்ணப்பித்து, பல மாதங்கள் ஆகியும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதனால், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறமுடியாத நிலை உள்ளது&' என்றார்.முதன்மைக் கல்வி அதிகாரி ஈஸ்வரன் கூறும்போது,"சங்ககிரி மற்றும் சேலம் கல்வி மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து, அதற்கான கோப்புகள் இன்னும் வரவில்லை. வந்ததும், அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்&' என்றார்.கல்வித்துறை வட்டாரங்கள் கூறும்போது, "அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்குள், அனைத்துப் பள்ளிகளும், அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கடும் நடவடிக்கை பாயும்&' என தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி