ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கு பின் ஆசிரியர் பணி நியமனத்திற்கு தனி வழிமுறைகள் - பள்ளிக்கல்வி அமைச்சர், செயலர், TRB தலைவர் மற்றும் இயக்குநர் அடங்கிய குழு அமைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கு பின் ஆசிரியர் பணி நியமனத்திற்கு தனி வழிமுறைகள் - பள்ளிக்கல்வி அமைச்சர், செயலர், TRB தலைவர் மற்றும் இயக்குநர் அடங்கிய குழு அமைப்பு


டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நான்குபேர் கொண்ட குழு, அடுத்த வாரம் சென்னையில் கூடுகிறது. குழுவின் இறுதி முடிவு, அடுத்த வாரமே, அரசாணையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கும் என்பது தெரியாத நிலை இருப்பதால், தேர்ச்சி பெற்றவர்கள் இப்போதே கலக்கம் அடைந்துள்ளனர்.
ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும், அக்டோபர் 3ம் தேதி, மறுதேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. புதியவர்களும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் வாய்ப்பு அளிக்கக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதேபோல், "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே. பணி நியமனம் செய்வதற்கு, இதுவே இறுதித் தேர்வு கிடையாது. எனவே, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கு தனி வழிமுறைகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தி மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.

டி.ஆர்.பி., முடிவு: "மறுதேர்வில், புதியவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இதற்காக 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதனால், அக்டோபர் 3ம் தேதி நடக்க இருந்த தேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்ற முடிவை, மனுவாக, டி.ஆர்.பி., சமர்ப்பித்தது.

அதேபோல், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து, அரசு எடுத்துள்ள முடிவையும் மனுவாக டி.ஆர்.பி., சமர்ப்பித்தது.

இதை ஏற்று, நேற்று முன்தினம், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையிலான உயர்மட்டக் குழுவில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழு, அடுத்தவாரம் சென்னையில் கூடி டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து, முடிவெடுக்கவுள்ளது.

குழு எடுக்கும் முடிவை, அரசுக்கு தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற்றதும், உடனடியாக அரசாணை வெளியிடப்படும். குழு, எந்த வகையான வழிமுறைகளை உருவாக்கப்போகிறது என, தெரியாமல், தேர்ச்சி பெற்றவர்களும், இனி தேர்வை எழுதப்போகும் தேர்வர்களும், "கிலி" அடைந்துள்ளனர்.

நேர்முகத்தேர்வு முறையை அறிமுகப்படுத்தி, அதற்கு தனி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுமா என, தெரியவில்லை. நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் என்ற முறை வந்தால், அது முறைகேடுகளுக்கு வழி வகுத்துவிடும். எனவே, உயர்மட்டக்குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கப் போகிறது என்பதை அறிய தேர்வர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி