அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியமாக மொத்த பட்ஜெட்டில் 42 சதவீதம் ஒதுக்கீடு - நாளிதழ் செய்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2013

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியமாக மொத்த பட்ஜெட்டில் 42 சதவீதம் ஒதுக்கீடு - நாளிதழ் செய்தி.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாதச் சம்பளத்துக்காக மட்டும் தமிழக அரசின் மொத்த பட்ஜெட்டில் இருந்து 42 சதவீதம் செலவிடப்படுவதாக நிதித் துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.வரும் நிதியாண்டுக்கான (2013-2014) வரவு- செலவு திட்ட மதிப்பீட்டில் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்காக ரூ.49 ஆயிரத்து 687 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மாநிலத்தில் 13 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்உள்ளனர். மேலும், ஏழு லட்சம் பேர் ஓய்வூதியதாரர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கான சம்பளங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வூதியப் பலன்களாக மொத்த பட்ஜெட்டில் 42 சதவீதம்செலவிடப்படுகிறது.சட்டப் பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் பிரதான அம்சங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அந்தத் துறையின் செயலாளர் க.சண்முகம் அளித்த பேட்டி:பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வரும் நிதியாண்டுக்கான (2013-14) நிதிநிலை அறிக்கையின் மொத்த அளவு ஒரு லட்சத்து 41,518 கோடியாகும். இது, கடந்த ஆண்டைவிட ரூ.19,852 கோடி கூடுதலாகும்.வருவாய் உபரி அதிகரிக்கும்: வரும் நிதியாண்டில் மாநில வரிகள்மூலமாக ரூ.86,065 கோடி வருவாயும், வரிகள் இல்லாத வகைகள்மூலம் ரூ.6,765 கோடியும், மத்திய அரசின் வரிகள் மூலம் ரூ.17,285 கோடியும், மானியங்களாக ரூ.8,463 கோடியும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.வரும் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட நிலையிலேயே கடன் அளவு இருக்கும். அனுமதிக்கப்பட்ட ரூ.24,263 கோடியில், ரூ.21,142 கோடியை உத்தேசிக்கப்பட்ட கடன் அளவாகப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மொத்த பட்ஜெட்டில், வரவுகளில் செலவுகளைக் கழித்தால் வருவாய்க் கணக்கில் உபரியாக ரூ.664.06 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் அளவான ரூ.451.52 கோடியைக் காட்டிலும் அதிகமாகும்.வருவாய் உபரி அதிகரிக்கும்போது நாம் கடன் வாங்கும் அளவு குறையும். அதன்படி, வருங்காலத்தில் தமிழகத்தில் வருவாய் உபரிஅதிகரித்து கடனின் அளவு குறைக்கப்படும்.டாஸ்மாக் மூலம் வருவாய்: தமிழகத்தில் வணிக வரிகள் மூலமாக நடப்பு நிதியாண்டில் ரூ.47 ஆயிரம் கோடி கிடைக்கும் என மதிப்பிட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரியுடன் முடிந்த காலத்தில் வரிகள் வழியாக ரூ.37,610 கோடி கிடைத்துள்ளது. டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு கலால் வரியாக நடப்பு நிதியாண்டில் ரூ.12,473 கோடி கிடைக்கும் என மதிப்பிட்டிருந்தபோதும் கடந்த ஜனவரி வரையிலான காலத்தில் ரூ.9,522 கோடி கிடைத்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட அளவை அடைவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் வரும் நிதியாண்டில் (2013-2014) ரூ.14,469 கோடி ஆயத்தீர்வை வரி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் முத்திரைத் தாள் விற்பனை உள்ளிட்டவற்றிலும் நிர்ணயித்த இலக்கு எட்டப்படும். தமிழகத்தில் வரிகளை வசூலிப்பதில் சிறப்பான முறை பின்பற்றப்படுவதால் எந்தத் தொய்வும் இல்லாமல் வரிகளை வசூலிக்க முடியும்.சமூக நலத் திட்டங்களுக்கு நிதி: விலையில்லாத அரிசி, மடிக்கணினி உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.43,449 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மொத்த பட்ஜெட்டில் 31 சதவீதமாகும்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியமாக மொத்த பட்ஜெட்டில் 42 சதவீதம் செலவிடப்படுகிறது. அதாவது, ரூ.49 ஆயிரம் கோடிஅளவுக்கு ஊதியத்துக்காக அளிக்கப்படுகிறது. புதிய பணியிடங்களைத் தோற்றுவித்தது, பணியாளர்கள் தேர்வு போன்ற காரணங்களால் ஊதியம் வழங்குவதற்கான செலவு அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதற்கான செலவும் உயரும் என நிதித் துறை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி