பள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை, பாடவேளைகளில் மட்டுமே மாற்றம் - இயக்குனர் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2013

பள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை, பாடவேளைகளில் மட்டுமே மாற்றம் - இயக்குனர் தகவல்.

பள்ளிக்கூடம் தொடங்கும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.

பள்ளிக்கூட நேரத்தில் மாற்றம்

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறைக்கு பின்திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.இதை மறுத்துள்ள பள்ளி கல்வித்துறை வகுப்புகள் நேர கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

யோகா, நீதிபோதனை

பள்ளிக்கல்வி மாணவர்களுக்கு போதிய அளவில் உடற்பயிற்சி, யோகா ஆகியவை வழங்கப்படவேண்டும் என்றும் நீதிபோதனை, உடல்நலக்கல்வி, கலைக்கல்வி, வாழ்க்கை கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, முதல் உதவி, தற்காப்பு விதிகள் முதலியவை இன்றைய காலக்கட்டத்தில் மாணவ–மாணவிகளுக்கு தேவைப்படுகின்றன. பாடம் கற்பிப்பதுடன் இந்த பயிற்சிகளையும் அளிக்கவேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை எண் 264ஐ வெளியிட்டது. அந்த ஆணையில் காலை வழிபாட்டு கூட்டம் நடத்தப்படவேண்டிய முறை, தியானம், எளிய உடற்பயிற்சி, யோகா, நீதிபோதனை உள்ளிட்ட வகுப்புகள் மற்றும் மதிய இடைவேளைக்கு பின்னர் வாய்ப்பாடு சொல்லுதல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதை கேட்டு எழுதுதல், வெள்ளிக்கிழமை இறுதி வகுப்பில் மாணவர்களின் தனித்திறன் செயல்பாடுகள் போன்றவை நடைபெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதை செயல்படுத்துவதற்காக பாடவேளைகளில் மாற்றம் கொண்டு வருவதற்காக ஒரு குழு அமைத்து பாடவேளை மாற்றி அமைக்கப்பட்டது.அதற்காக மாதிரி பாட கால அட்டவணை தயார் செய்யப்பட்டது. இதுபோன்று பாடவேளை நேரங்களை பள்ளிகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரத்திற்கு உட்பட்டு மாற்றி அமைத்துக்கொள்ள முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பாடவேளைகளில் மாற்றம்

பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்கள் தொடங்கும் நேரத்திலும் முடியும் நேரத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது செயல்படும் நேரங்களிலேயே செயல்படும். இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடவேளை கால அட்டவணை 10–வது மற்றும் பிளஸ்–2 மாணவர்களுக்கு பொருந்தாது. அத்துடன் சென்னை மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் யோகா, உடற்பயிற்சி, நீதிபோதனை வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி