பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை 47,376 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2013

பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை 47,376

மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பள்ளி செல்லா குழந்தைகள், 47,376 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, சிறப்பு மையங்களிலும், வயதுக்கேற்ற பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டு, கல்வி அளிக்கப்படுகிறது.அனைவருக்கும் கல்வி இயக்க, மாநில இயக்குனரக உத்தரவை அடுத்து, மாநிலம் முழுவதும் ஆண்டு தோறும், 6 - 14 வயது வரை உள்ள, பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறாளிகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது.அந்தந்த யூனியன் பகுதியில் உள்ள, வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், தலைமையாசிரியர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவர். நடப்பு ஆண்டுக்கான கணக்கெடுப்பு, கடந்த ஏப்., 10ம் தேதி, மாநிலம் முழுவதும் துவங்கியது.கணக்கெடுப்பு பணியின் போது சேகரித்த விவரங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க மாநில இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும், 6 - 10 வயது வரை, 18,216 பேரும், 11 - 14 வரை, 29,160 பேரும் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டத்தில், 4,587 பேரும், குறைந்த பட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 462 பேரும் பள்ளி செல்லாமல் உள்ளனர். மேலும், தேனி மாவட்டம், 545 பேர், கன்னியாகுமாரி, 551 பேர், புதுக்கோட்டை மாவட்டம், 572 பேர் என, குறைந்த அளவில் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளது, கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது.கண்டுபிடிக்கப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளுக்கு, சிறப்பு மையங்களிலும், வயதுக்கேற்ற பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படுகிறது.தமிழகம் முழுவதும், ஐந்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசு தொடக்கப் பள்ளி குறித்து கணக்கெடுப்பு நடத்த, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 836 அரசு தொடக்கப் பள்ளிகளில் நடந்த கணக்கெடுப்பில், பாலக்கோட்டை அடுத்த, அய்தாண்டஹள்ளி அரசு தொடக்கப் பள்ளியில், 3 மாணவர் மட்டும் படிப்பது தெரியவந்து உள்ளது. இங்கு, 3ம் வகுப்பு, 4ம் வகுப்பு, 5ம் வகுப்பில் தலா, 1 மாணவர் என, மொத்தம், 3 மாணவர்களே படித்து வருகின்றனர்.இப்பள்ளி குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கு தகவல் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறியது: பெற்றோர், தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதைப் பெருமையாகக்கருதுகின்றனர். இந்தக் கல்வியாண்டில் பெரும்பாலான அரசு பள்ளிகளிலும், ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்டாலும், பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளை, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் கூட, தங்களது குழந்தைகளை,தனியார் பள்ளிகளில் சேர்ப்பதன் விளைவாக இது போன்ற நிகழ்வு நடப்பதற்குக் காரணமாக உள்ளது. இதனால், அரசு பள்ளிகளில், 5க்கும் குறைவாக உள்ள படிக்கும் மாணவர்களால் அரசுக்குச் செலவு ஏற்படுவதை விட, அங்கு பணியாற்றும் ஆசிரியர், மாணவர்களுக்கு முழுஈடுபாடு உடன் கல்வி கற்றுக் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி