குரூப் 1, 2 போன்ற அரசு தேர்வுகளில் வெற்றி பெற வழிகள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2014

குரூப் 1, 2 போன்ற அரசு தேர்வுகளில் வெற்றி பெற வழிகள்...

அரசு பணி என்பது ஒவ்வொரு மாணவர்களின் கனவாக உள்ளது. இதில், சாதிக்க பல எளிமையான வழிகள் உள்ளன. இம்மாதம் முதல் குரூப் 1 தேர்வுகளும், தொடர்ந்து பல்வேறு தேர்வுகளும் நடக்க உள்ளன. குரூப் 1 தேர்வு, இனி மாநில குடிமைப்பணி என அழைக்கப்படவுள்ளது. குரூப் 1 முதன்மை தேர்வில் தற்போது 4 தாள் கொண்டு வரப்பட்டு குரூப் 2 தேர்விலிருந்த நகராட்சி ஆணையர், சார்பதிவாளர் போன்ற பணி குரூப் 1 தேர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.

குரூப் 2 தேர்வில் இருக்கும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகள், இதுவரை முதனிலைத்தேர்வு, நேர்முகத்தேர்வு வாயிலாக நிரப்பப்பட்டன. இப்பணிகள், இனி முதனிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்முகத்தேர்வு கட்டங்களிலும் நிரப்பப்படும். அதாவது, முதனிலைத்தேர்வு கொள்குறி வகையிலும், முதன்மைத்தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையிலும் அமையும். வி.ஏ.ஓ தேர்வுகளில் இனி கிராம நிர்வாகம், உள்ளாட்சித்துறை சார்ந்த வினாக்கள் இடம்பெறும். குரூப் 4 தேர்வுத் திட்டத்தில் மாற்றம் இல்லை. ஒட்டுமொத்தமாக எல்லாத் தேர்வுகளிலும் மனத்திறன் சம்பந்தப்பட்ட 'ஆப்டிடியூட்' வகை வினாக்கள் (புதிதாக) கட்டாயம் இடம்பெறும்.

* இத்தேர்வுகளில் கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் 'சி-சாட்' என்ற தாள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சியும் இந்த தாளை புதிதாக சேர்த்திருக்கிறது.

* பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள், புதிதாக இப்பகுதியை படிக்க வேண்டும். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல், சமூகஅறிவியல் புத்தகங்களை முழுமையாக படிக்கவேண்டும்.

* பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும். தேர்வுகளில் தத்துவஇயல், மனத்திறன் தொடர்பான கணிதக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை.

* கடைகளில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும். நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விடையளிக்க, தினமும் செய்தித்தாள்களைப் படித்து குறிப்பு எடுக்க வேண்டும். முக்கிய செய்தி, சிறப்பு கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும்.

* இந்திய அரசியலமைப்பு மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்களில் குறைந்தது 5 கேள்வி தவறாமல் இடம்பெறும். முக்கிய அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள், பிரிவுகள் ஆகியவை பற்றிய பட்டியலை சொந்தமாக தயார் செய்து வைத்து கொள்ளலாம்.

* அறிவியல் பாடங்களை படிக்கும்போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் சயின்சில் அடிப்படையாக 2 கேள்வி இருக்கும். இதற்கு கம்ப்யூட்டர் குறித்த இயல்பான அறிவே போதும்.

* மொழிப்பாடம் விருப்ப பாடமாக தேர்வு செய்வதில் குழப்பம் வேண்டாம். ஆரம்பம் முதல் ஆங்கிலத்தில் படித்து புலமை பெற்றவர்கள் ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்கலாம். தமிழ் வழியில் படித்தவர்கள் தமிழைத் தேர்ந்தெடுக்கலாம்.

* பாடவாரியாக அட்டவணை தயார் செய்து கொண்டு, தேர்வுக்கு முன் குறைந்தபட்சம் 10 மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும். பழைய வினாத்தாள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்திலேயே கிடைக்கின்றன. 'சி-சார்ட்' வினாக்களை பொறுத்த வரை, சொந்தமாக படிக்க முடியாது என்பதால், பயிற்சி மையத்தில் படிக்கலாம்.

* இந்து அறநிலையத்துறை சார்ந்த பணிகளுக்கான தேர்வுகளுக்கு, சைவமும், வைணவமும், இந்து சமய இணைப்பு விளக்கம் போன்ற நூல்களை தேர்வு ஆணையமே பரிந்துரைக்கிறது. இப்புத்தகங்கள் பெரிய கோயில்களில் கிடைக்கின்றன.

ஒரு தேர்வில் வெற்றிபெற்று விட்டால், படிப்பதை நிறுத்தி விடாதீர்கள். பணியில் சேரும்வரை என்ன வேண்டுமானாலும் நிகழலாம். கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி