இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2014

இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட்

ஆளில்லா விண்கலத்துடன் ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்த ராக்கெட்டுக்கான 24 மணி நேரம் 30 நிமிஷங்கள் கொண்ட கவுன்ட் டவுன் புதன்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது.

ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட் மொத்தம் 630 டன் எடையும், 43.4 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் பக்கவாட்டில் "எஸ் 200' என்ற 2 ஸ்ட்ராப் ஆன் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த வகை ராக்கெட்டுகள் 4 டன் வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் திறன் பெற்றவை. ரூ.140 கோடி செலவில் இந்தச் சோதனை ராக்கெட் அனுப்பப்படுகிறது. 3,735 கிலோ எடை கொண்ட ஆளில்லா விண்கலம், இந்த ராக்கெட்டில் அனுப்பப்படுகிறது.

126 கிலோ மீட்டர் உயரத்துக்கு விண்கலம் செல்லும்: ஆளில்லா விண்கலம் ரூ.15 கோடி செலவில் அனுப்பப்படுகிறது. ராக்கெட் ஏவப்பட்ட 5 நிமிஷங்கள் 25 விநாடிகளில் இந்த விண்கலம் 126 கிலோ மீட்டர் உயரத்தில் விடப்படும். அங்கிருந்து 80 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் விண்கலம் நுழையும். கீழே வரும்போது மெதுவாக இறங்கும் வகையில் இதில் பாராசூட்டுகளும் பொருத்தப்பட்டுள்ளன.

அந்தமான், நிக்கோபார் தீவுகளிலிருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் வங்கக் கடலில் இந்த விண்கலத்தை விழச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தரையிலிருந்து கிளம்பிய 30 நிமிஷங்களுக்குள் வங்கக் கடலில் விண்கலம் விழும்.

கடலோரக் காவல்படையினர் இந்த விண்கலத்தை மீட்டு ஆய்வுக்காக இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். வழக்கமாக, ராக்கெட்டுகள் வளிமண்டலத்தைக் கிழித்துக்கொண்டு மேலே செல்லும்போது ஏற்படும் அதிக வெப்பத்தைத் தாங்கும் வகையில் அவற்றில் வெப்பத் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும்.

அதேபோல், விண்கலங்கள் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழையும்போதும் 1,600 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் ஏற்படும். அதைத் தாங்கும் வகையில் வெப்பத் தகடுகளும் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைவதால் ஏற்படும் வெப்பத்தை விண்கலம் தாங்குகிறதா, விண்கலத்தில் உள்ள பாராசூட்டுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த விண்கலம் சோதித்துப் பார்க்கப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் முதல்படியாக, இந்த ஆளில்லா விண்கலம் சோதனை செய்யப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் அனுபவம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்கலத்தைத் தயாரிக்க உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி