இணையதளத்தில் வரன் தேட 'ஆதார்' அவசியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2014

இணையதளத்தில் வரன் தேட 'ஆதார்' அவசியம்


'ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் தான், இணையதளங்களில், திருமண பதிவு களை மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம், மோசடி நபர்களின் மாய வலையில், பெண்கள் சிக்காமல் பார்த்துக் கொள்ள, மத்திய அரசு முயன்று உள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த, அமைச்சர் மேனகா தலைமையிலான, மத்திய, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சமீபத்தில் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, 'திருமணத்திற்கான வரன் தேடி, திருமண இணைய தளங்களில் பதிவு செய்யும் ஆண்களின் முகவரி, தொழில் போன்ற விவரங்களை, இணையதள நிர்வாகிகள் சரிபார்க்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. மொபைல் போன் எண்ணை மட்டும் தெரிவித்து, போலியான பெயர், மோசடியான முகவரி போன்ற விவரங்களை தெரிவித்து, பெண்களை ஏமாற்றும் போக்கு, திருமண இணையதளங்களில் அதிக அளவில் நடைபெறுவதை அடுத்து, இந்த கிடுக்கிப்பிடி உத்தரவை மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்து உள்ளது.

அதன்படி, ஆதார் அடையாள அட்டை இருக்கும் ஆண்கள் அல்லது பிற, போட்டோ ஒட்டியஅடையாள அட்டை வைத்திருக்கும் நபர்களின் பதிவுகளை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என, திருமண பதிவு இணைய தளங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆதாரங்களை இணையதளத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டும் எனவும், மத்திய அரசு உத்தரவிட்டுஉள்ளது.இதன் மூலம், ஒரே நபர், பல இணையதளங்களில், பல மோசடியான பெயர்களில், திருமணத்திற்கு வரன் தேடி, பெண்களை ஏமாற்றும் போக்கு தடுக்கப்படும் என்பது, மத்திய அரசின் நம்பிக்கை. மேலும், தவறான எண்ணத்தில் பெண்களை பின்தொடர்பவர்கள், அவர் களின் முகவரி, ஆதாரங்கள் போன்ற விவரங்களை தேடுவோருக்கு சிக்கல் தான். எனினும், இந்த புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு முதல் தான் நடைமுறைக்கு வருகிறது.

'ஆதார்' - சில சந்தேகங்கள்

* ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், நேர்மையானவர்களாகவும், நியாய மானவர்களாகவும் இருப் பார்கள் என்ற மத்திய அரசின் எண்ணம் நியாயம் தானா?

* ஆதார் அடையாள அட்டை பெற அளிக்கப்பட்ட சான்றுகள் எந்த விதத்தில் சரியானவை என, முறையாக உறுதி செய்யப்படவில்லை.

* இந்த அடையாள அட்டை யில் உள்ள புகைப்படத்தை எளிதில் மாற்றி விட வாய்ப்பு உள்ளது என்ற கருத்தை மறுப்பதற்கில்லை.

* ஆதார் அடையாள அட்டை யில், அட்டைதாரரின் முகம் மட்டும் தான் தெரியும். அவரின் உயரம், எடை, நோய் போன்ற விவரங்கள் குறிப்பிடப்படுவதில்லை.

* இதனால், ஆதார் அடையாள அட்டை இருந்தால் போதும், அந்த நபர் நியாயமானவர் என, பொத்தாம் பொதுவாக கருத முடியாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி