பெஷாவரின் ஒரு அன்னையின் வலியான வரிகள் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2014

பெஷாவரின் ஒரு அன்னையின் வலியான வரிகள் :

"நீ தானே துப்பாக்கி விசையை இழுத்தாய் ?
உனக்குத்தெரியுமா ? ஆறு வாரமாக அவன் வயது இருக்கையில் அந்தப் பிஞ்சு நெஞ்சின் இதயத்துடிப்பை கேட்டேன் நான்...உலகின் தூய்மையான அற்புதம் அது
திரையில் ஒரு சிறுதுளி...உயிர் உருவானது
உயிர்...பிறகு அவனின் மூக்கு...கண்கள்..உருவம் பெற்ற அவனின் கரங்கள்
தொப்புள் கோடியை எப்படி அவனின் சின்னச்சிறு கைகளால் பற்றுவது என்று அவன் கற்றுக்கொண்டான்
அவனின் கதகதப்பான பாதுகாப்பு மிகுந்த இருண்ட உலகில் திரும்பி பார்த்தான்.,அவன் நகர்வதை நான் உணர்ந்தேன்
ஒரு சிறிய உலுக்கல்...வாழ்க்கை மீண்டும் அப்படி இருப்பதே இல்லை.
அவன் நகர்ந்த ஒவ்வொரு முறையும்...என் கருவறையில் உதைத்த பொழுதும்..தலைகீழாகக் குதித்த பொழுதும்,தும்முகையிலும்,விக்கிய பொழுதும் என் இதயம் ஒரு நொடித்துடிப்பதை நிறுத்திக்கொண்டது
அவன் மெதுவாக வளர்ந்தான்,என் இரவுகள் ஆர்வத்தால் நிறைந்தன,தூக்கத்தில் திரும்பி அவனை காயப்படுத்தி விட்டால் என்னாகும் என பயந்தேன்
நான் நாள்முழுக்கக் கவலை பூத்து இருந்தேன்...பெரிதாக ஒலி எழுப்பி அவனைப் பயப்பட வைத்து விட்டேனோ என்று
நான் நடக்கையில்,என் கைகள் என் கர்ப்பப்பையை அனைத்துக்கொண்டன..வெளியுலகில் இருந்து அவனைப் பாதுகாக்க
அவன் என் தோலின் வழியாக வடிந்த சூரிய பிரகாசத்தை உணர்ந்தான்,என் குரல் அவனை அமைதிப்படுத்தியது,சில கணங்கள் நான் மவுனம் காத்தால் அவன் பயந்து கிளர்ச்சிகள் செய்தான்
நான் பாடினால் அவன் மென்மையாய் பதில் தந்தான்
அவனை வெளியே விடும் தருணம் வந்தது
இந்த இரைச்சலான, கோபக்கார, ஒளிமிகுந்த உலகுக்குள்...
அவன் தள்ளினான், கதறினான், நான் தள்ளினேன்... அவன் உங்கள் உலகில் நுழைந்தான்
அவன் பயப்பட்டான்
அவனின் இருண்ட, ஈரமான, பாதுகாப்பான உலகு போனது என்று... அவன் பயத்தில் கத்தினான்
அவனை என் இதயத்துக்கு அருகில் வைத்துக்கொண்டேன்
அமைதி கண்மணியே... அமைதி.. அழாதே
அம்மா இங்கே இருக்கிறேன்... எப்பொழுதும் உனக்காக
உன்னைக் காக்க, எல்லா சத்தங்களில் இருந்தும் உன்னைப் பாதுகாக்க, வெளிச்சங்களில் இருந்து
பகல், இரவு....தாலாட்டி அவனைத் தூங்க வைத்தேன்...அவனை வாழ்நாள் முழுக்கப் பராமரித்தேன்..
என் கரங்கள், என் மார்பகங்கள், என் இதயத்துடிப்பு...நீ ...தெரியாத தொப்புள்கொடி
.. அவன் திரும்பக் கற்றுக்கொண்டான்.. தவழ்ந்தான்... விழுந்தான்... ஐயோ கவனம், என் செல்வமே !
அவன் முதலடி எடுத்து வைத்தான். என்னை நோக்கி திரும்பினான், சிரித்தான்
என் முத்து அவன்
2...3....4....7....12...17....கருப்பைகள் வலியால் துடிக்கின்றன..
நீ துப்பாக்கி விசையை அழுத்தினாய்
பிஞ்சுகள் நிலத்தில் தடுமாறி விழுந்தார்கள்
ரத்தம் கொப்பளித்தது
என் கருப்பையில் ரத்தம் கசிகிறது ...17....18....20....23....84...
கருப்பைகள் ரத்தம் வடிக்கின்றன.. கோபத்தில் கதறுகின்றன
இஸ்லாம் அறியா கருப்பைகள் அவை... கீதையும் தெரியாது அவற்றுக்கு...எப்பொழுதும் ஹதீஸ் படிக்காதவை அவை...ஏன் இறைவன் தன்னுடைய பிள்ளையை ரத்தம் வடியவிட்டு வாடவிடுகிறான் என்று புரியாதவை அவை....ஆண்டவன் ஒன்றும் அம்மா இல்லையே ?
எப்பொழுதும் அவன் கருத்தரிக்கவில்லை...தனக்குள் உயிரைத் தாங்கியது இல்லை..இத்தனை பணியைச் செய்தது இல்லை
பிள்ளையை வளர்க்காமல், மழலையால் பருகப்படும் மார்பகப்பால் கசிகையில் அழுத்தும் பிஞ்சு இதழின் பரவசம் அவனுக்குத் தெரியாது
நான் ஒரு சாதாரண அன்னை
நான் மதம் இல்லை
நான் தேசம் அல்ல
ரத்தம் வடிகிற கருப்பைக் கொண்ட அம்மா நான்
என் மகன் காலையில் பள்ளிக்குப் போனான்
சுத்தமான சீருடை...குளிரின் கடுமையில் இருந்து காக்க கதகதப்பான கம்பளி உடை..மிளிரும் காலணிகள்...சூடான மதிய உணவு அடங்கிய டப்பாக்கள்...
அவன் வர காத்திருந்தேன் ...பசியோடு...குறும்போடு...என் கரங்களில் மீண்டும் தஞ்சம் புக
நீ துப்பாக்கி விசையை அழுத்தினாய்
அது வெறும் ரத்தமல்ல
என் கனவுகள் ஒரு துணியில் சுற்றப்பட்டுக் கிடக்கின்றன...
அவை எனக்கு அலாத்-அல்-ஜனாஸா வார்த்தைகளைச் சொல்ல வைக்கின்றன...
'பிஸ்மில்லா..
ஆனால், எனக்கு கேட்பது எல்லாம் வெறுமையான ரத்தம் வடியும் என் கருப்பையின் மவுனக்கதறல் மட்டுமே...

- ஒரு கனக்க வைக்கும் கதறல் இது

'குழந்தைகளை விட்டு விடுங்கள்; என்னைப் பிணைக் கைதியாக்குங்கள்!'




உலகையே பதறச் செய்திருக்கிறது தலிபான்களின் பெஷாவர் பள்ளித் தாக்குதல். தெய்வத்திற்குச் சமமான குழந்தைகள் ரத்தச் சகதியில் மிதந்தது, கல் நெஞ்சையும் கரைய வைத்த சம்பவம்.

‘‘உலகில் நடந்த தாக்குதல்களிலேயே மிகவும் மோசமான தாக்குதல் இதுதான். இதற்காக பாகிஸ்தான் தலை குனிகிறது!’’ என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது பேட்டியில் வருத்தப்பட்டார்.

எப்போதும் கலகலத்துக் காணப்படும் ட்விட்டர் சமூக இணையதளமும் சோகத்துடனே ட்வீட்டுகளை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. பெஷாவர் சம்பவத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமுள்ள வி.ஐ.பி.க்கள் ட்வீட்டியுள்ள ட்வீட்டுகள் இவை:

பான் கீ மூன் (ஐ.நா. பொதுச் செயலாளர்):

‘‘குழந்தைகள் மீதான இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. இது மிகவும் கோழைத்தனமான செயல் மட்டுமல்ல; இதுபோன்ற கொடிய செயலுக்கு எந்தவித நியாயத்தையும் கற்பிக்க முடியாது!’’

ஒபாமா (அமெரிக்க அதிபர்):

‘‘குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான இந்தக் கோழைத்தனமான தாக்குதலின் மூலம், தீவிரவாதிகள் தாங்கள் ஒழுக்கமற்ற, கொள்கைப் பிடிப்பற்றவர்கள்தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

தீவிரவாதத்தை ஒழிக்க எங்கள் அமெரிக்க அரசு பாகிஸ்தான் மக்களுடன் இணைந்து அமைதியை நிலைநாட்டும் வகையில் செயல்படும்!’’

அமீர்கான் (நடிகர்):

‘‘எந்தப் பாவமும் அறியாத குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கேள்விப்பட்டபோது, இடிந்து போய்விட்டேன். இன்னும் என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை!’’

மோடி (இந்தியப் பிரதமர்):

‘‘அறிவீனமான இந்தச் செயல் மூலம் தீவிரவாதிகள் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. குழந்தைகள் தாக்கப்பட்ட இந்தச் சம்பவத்துக்கு என் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!’

சானியா மிர்சா (டென்னிஸ் வீராங்கனை)

‘‘செய்தியைக் கேள்விப்பட்டதும் என் இதயமே நொறுங்கிவிட்டது. நாட்டில் மனிதம் எங்கே போகிறது?

கடவுளே... அந்தப் பிஞ்சுக் குழந்தைகளையும், பிரிவினால் வாடும் பெற்றோரையும் தயவுசெய்து காப்பாற்றுங்கள். என் மனம் வலிக்கிறது!’’



டாப்ஸி (நடிகை):

முதலில் ஆஸ்திரேலியா; இப்போது பாகிஸ்தான்; அடுத்து எந்த நாடு? இப்படியே தினமும் பயந்து பயந்தே வாழ வேண்டியிருப்பது துரதிர்ஷ்டமான விஷயம். நினைக்கவே பயமாக இருக்கிறது!’’

சோனாக்ஷி சின்ஹா (நடிகை):

‘‘கடவுளே... இந்த உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? இம்மாதிரி நேரங்களில்தான் மனிதம் பற்றிய கேள்வி எழுகிறது. எல்லோரும் அந்தக் குழந்தைகளுக்காகப் பிரார்த்தியுங்கள்!’’

கிரண்பேடி (முன்னாள் ஐபிஎஸ்):

‘‘உலகின் மிகப் பெரிய துயரம் - பெற்றெடுத்த குழந்தைகளை இழந்து தவிக்கும் தனிமைதான்! உலகின் மிகப் பெரிய குற்றம் - பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளை இழக்க வைப்பது.

அப்படிப்பட்ட மிகப் பெரிய துயரமும் குற்றமும் பெஷாவரில் நடந்திருக்கிறது! இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்!’’

விஷால் தத்லானி (பாலிவுட் பின்னணிப் பாடகர்):

‘‘கடவுள் என்றைக்குமே இந்தச் செயலை மன்னிக்க மாட்டார். வாழ்நாள் முழுவதும் இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல். இத்தகைய கொடூர செயலைச் செய்தவர்கள் இறக்கும்போது, புதைப்பதற்கு இடம்கூட இருக்காது!’’

கைலாஷ் சத்யார்த்தி (நோபல் பரிசாளர்):

"தலிபான்களே... உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். என்னைப் பிணைக் கைதியாக்கிக் கொள்ளுங்கள். என் உயிரைக்கூட எடுத்துக் கொள்ளுங்கள்! ஒன்றுமறியா பச்சிளங்குழந்தைகளை விட்டு விடுங்கள்!’’

2 comments:

  1. I was worried when I saw any sad news in TV, but first time I cried. Sure all that devil thalibans will go to hell.

    ReplyDelete
  2. Venai vethaiapavAn .....venai. Arupaan....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி