பள்ளிகளில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்து அறிக்கை: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2015

பள்ளிகளில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்து அறிக்கை: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு


பள்ளிக் கூடங்களில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.‘தி கேட்டலிஸ்ட் டிரஸ்டு’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு ஒரு புகார் அனுப்பி இருந்தது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
மத்திய அரசு கல்வியின் மீது மேல்வரி(செஸ்) என்று வசூலிக்கும் தொகை ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் சரியான முறையில் செலவழிக்கப்படாமல் பள்ளிகளில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தாத நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் பள்ளிகளில் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் பெண் குழந்தைகள் மிகவும் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்தப் புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டது. மேலும் இந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகனுக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 21ஏ வழங்கும் அடிப்படை உரிமையின்படி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவரும் கல்வி கற்கும் இடங்களில் தேவையானஅடிப்படை வசதிகளைப் பெறவேண்டும். இந்த அடிப்படை உரிமையை மாணவ மாணவியருக்கு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. மத்திய அரசு விதிக்கும் கல்வி மீதான மேல்வரியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் நிதியானது அதற்கான நோக்கத்துக்காக சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.எனவே மத்திய அரசு தமிழக அரசுக்கு கல்வி மீதான மேல்வரி மூலமாக ஒதுக்கியுள்ள தொகையில் பயன்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ள தொகை குறித்த விவரம் மற்றும் இந்த நிதி மாநில அரசு எந்த நோக்கத்துக்குப் பயன்படுத்தி வருகிறது போன்ற விவரங்களை 4 வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு தலைமை செயலாளர் அறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி