குறிப்பிட்ட சில விற்பனையாளர்களிடமிருந்துதான் மின்னணுப் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற அகில இந்திய தொழில்நுட்பக் கல்லூரிகளின் குழு (ஏஐசிடிஇ) உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சுயநிதி தொழில்முறை கலை, அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் செயலாளர் பி.செல்வராஜ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எங்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கல்லூரிகளுக்கு கடந்த 2012-13-ஆம் ஆண்டு அங்கீகாரம் புதுப்பித்தலின் போது, மின்னணு புத்தகம் வழங்கும் சில குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்துதான் வாங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்லூரிகளின் குழு உத்தரவிட்டது.அந்த உத்தரவை எதிர்த்து அப்போது வழக்கு தொடர்ந்த போது, ஏஐசிடிஇ-யின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், 2013-14-ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் குறிப்பிட்ட மின்னணு புத்தக விற்பனையாளர்களிடமிருந்து புத்தகம் வாங்க வேண்டும் என வற்புறுத்த மாட்டோம் எனவும் உறுதி அளித்தது. தற்போது மீண்டும் அதே போன்று, குறிப்பிட்ட சில நபர்களிடமிருந்து மட்டுமே மின்னணு புத்தகங்களை வாங்க வேண்டும் என ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக அமெரிக்க டாலர் மதிப்பில் வரைவோலை எடுத்து அனுப்புமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யவில்லையெனில் கல்லூரி அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என எங்களை நிர்பந்திக்கிறது. எனவே, ஏஐசிடியின் இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்து, கல்லூரி அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆர்.நடராஜன், என்.ஆர்.சந்திரன் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி, கடந்த 2012-ஆம் ஆண்டில் இதே போன்ற வழக்கில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்லூரிகளின் குழு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன் அடிப்படையில், குறிப்பிட்ட மின்னணு புத்தக விற்பனையாளர்களிடமிருந்து கல்லூரிகள் புத்தகம் வாங்க வேண்டும் என்ற ஏஐசிடியின் தற்போதைய உத்தரவுக்கும்இடைக்காலத் தடை விதிக்கிறேன் என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி