மார்ச் 29: மீரத் எழுச்சியை மங்கள் பாண்டே நிகழ்த்திய தினம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2015

மார்ச் 29: மீரத் எழுச்சியை மங்கள் பாண்டே நிகழ்த்திய தினம்


1857 இன் புரட்சியை ஆரம்பித்து வைத்த மீரத் எழுச்சியை மங்கள் பாண்டே நிகழ்த்திய தினம் மார்ச் இருபத்தி ஒன்பது. ஆரம்பிக்க முக்கிய காரணமான மங்கள் பாண்டே ரத்தில் வெடித்து வட மற்றும் மத்திய இந்தியா முழுக்க இந்த புரட்சி பரவியது . ஒற்றை நாளில் ஏற்பட்ட புரட்சி அல்ல அது ஆங்கிலேய கம்பெனி ஆதிக்கத்தின் நூறாண்டு கால ஆட்சியின் கொடுமைகளின் விளைவாகவே இது எழுந்தது



ஒரு எண்பத்தி ஏழு காலத்துக்குள் பசி என்றால் என்னவென்றே அறியாத இந்தியாவின் பல பகுதிகளில் பெரிதாக பன்னிரெண்டு பஞ்சங்கள் ஏற்பட்டு இருந்தன . முக்கியமான காரணம் இந்தியாவின் விவசாயம் மற்றும் கைவினைத்தொழில்களை ஆங்கிலேய அரசு ஒட்டுமொத்தமாக காலி செய்து இருந்தது . நிலவரியை ஏகத்துக்கும் ஏற்றியது . ஜமிந்தார்களிடம் சிக்கிக்கொண்டு இருந்த மக்கள் இப்பொழுது லேவா தேவி காரர்களிடம் சிக்கி நிலங்களை இழந்தார்கள் . மாட்டுவண்டியை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல எட்டணா வரை வாங்கி கசக்கி பிழிந்தது அரசு

இந்திய அரசர்கள் ஆண்ட பகுதிகளில் அப்பகுதி மக்கள் வேலை பெற்று வந்தார்கள் . அந்த பகுதியை ஆங்கிலேய அரசு கைப்பற்றினால் அங்கிருக்கும் பெரும்பாலான பதவிகள் ஆங்கிலேயர் வசம் போய்விடும் . அதைவிட கொடுமையான அம்சம் உயர் பதவிக்கு சில இந்தியர்கள் போனாலும் அவர்களால் அடிப்படை ஆங்கிலேய ஊழியன் வாங்கும் சம்பளத்தை கூட நினைத்து பார்க்க முடியாது

மத நம்பிக்கைகள் மீதும் ஏகப்பட்ட அடிகளை ஆங்கிலேய அரசின் செயல்பாடுகள் உண்டு செய்தன . கிறிஸ்துவ மிசினரிகள் ராணுவத்தால் பாதுகாக்கபட்டு கிறிஸ்துவ மதம் பரப்பப்பட்டது . பல பேர் மதமாற்றத்துக்கு உள்ளனார்கள் . அதே போல சதி முதலிய இந்து மத சடங்குகள் நீக்கப்பட்டது தங்கள் நம்பிக்கைகளில் தலையிடுவதாக மக்கள் உணர்ந்தார்கள் . ராணுவ வீரர்கள் கடல் கடந்து போக வேண்டும் என்பதும் மத நம்பிக்கையை மீறுவதாக இருந்தது . உச்சமாக கிறிஸ்துவராக மாறினால் பரம்பரை சொத்தை பிள்ளை பெறலாம் என்றொரு சட்டம் வேறு வந்து சேர்ந்தது

அவாத் எனும் அரசை கைப்பற்றியது ஆங்கிலேய அரசு ; அங்கிருந்த எண்ணற்ற மக்கள் வேலை இழந்தார்கள் . ஜான்சியின் அரசரின் தத்துப்பிள்ளை வாரிசாக ஏற்கப்பட மாட்டார் என்றும் அறிவித்தது . இரண்டாம் பாஜி ராவ் அவர்களின் தத்துப்பிள்ளை நானா சாஹிப்புக்கு வருடாவருடம் வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்பட்டது . இன்னமும் கொஞ்சம் கூடுதலாக கடைசி முகலாய அரசர் இரண்டாவது பகதூர் ஷாவை டெல்லியை விட்டு வெளியேற்றுவதோடு மன்னர் மற்றும் இதர பட்டங்கள் பறிக்கப்படும் என்றும் அறிவித்தனர்

எண்ணற்ற வருத்தங்களுக்கு நடுவே ராணுவ வீரர்களின் வருத்தங்கள் சேர்ந்து கொண்டன . கடல் கடந்து போவது முதல் சிக்கல் என்றால்,மத அடையாளங்களை வைத்துக்கொள்ள கூடாது என அறிவித்தது அடுத்த அடி . இஸ்லாமியர்களின் நம்பிக்கை மற்றும் இந்துக்களின் நம்பிக்கையை தாக்கும் வண்ணம் என்ஃபீல்ட் கேட்ரிட்ஜ்களில் மாட்டு மற்றும் பன்றி கொழுப்பு பயன்படுத்த பட்டிருந்தது . அதை கடித்து தான் லோட் செய்ய வேண்டும் . கூடவே ஆங்காங்கே மிகவும் கேவலமாக வீரர்கள் நடத்தப்பட்டார்கள் . ஒட்டுமொத்த படையில் அவாதின் வீரர்கள் மட்டும் எழுபத்தைந்து ஆயிரம் பேர் அவர்கள் கடும் வெறுப்பில் இருந்தார்கள் .

முப்பது நான்காவது படைப்பிரிவில் பரக்பூரில் தான் சிக்கல் வெடித்தது. ஹெவ்சன் எனும் ஆங்கிலேய மேஜர் சார்ஜண்டுக்கு துப்பாக்கியை கடித்து லோட் செய்ய மறுத்து ஒரு வீரன் கிளர்ச்சி செய்வதாக செய்தி கிடைத்து. கிளம்பிப்போனார். முக்கியமான அதிகாரிகள் வேறு இல்லை; ஏற்கனவே வீரர்கள் கொதிநிலையில் இருந்தார்கள், ஹெவ்சன் அங்கே போனார். “நம் மத நம்பிக்கைக்கு எதிரான இந்த செயலை ஏன் செய்கிறீர்கள் ? வாருங்கள் கிளர்ச்சி செய்வோம் ” என்று மங்கள் பாண்டே குரல் கொடுத்துக்கொண்டு இருந்தான். ஹெவ்சன் கிட்டே வந்தார்,துப்பாக்கியை முடுக்கினான் . பதுங்கி தப்பித்துக்கொண்டார் அவர்

ஜெனரல் போ வந்தார் ;குதிரைச் சத்தத்தைக் கேட்ட பாண்டே அங்கிருந்த பீரங்கியின் பின்னால் மறைந்து கொண்டு போவை நோக்கிச் சுட்டான். எனினும் அது குறி தவறி குதிரையைத் தாக்கியது[ அதிலிருந்து தப்பித்தாலும் பாண்டேவின் கத்தியால் இடது கை,கழுத்து ஆகியவற்றில் வெட்டு பெற்றார் போ. பாண்டே மேலும் தாக்காதவாறு ஷேக் போல்ட் தடுத்தார், அதற்கு பின்பு அந்த படைப்பிரிவின் எந்த வீரரும் மங்கள் பாண்டேவை கைது செய்ய மறுத்தார்கள், பின்னர் வேறு படை கொண்டு வந் பாண்டேவை கைது செய்த பின்பு அந்த முப்பத்தி நான்காம் படைப்பிவு கலைக்கப்பட்டது . பாண்டே ஏப்ரல் எட்டாம் தேதி தூக்கில் போடப்பட்டார்

இதே நாளில் மீரத்தில் ஆங்கிலேய படையில் இருந்த சிப்பாய்கள் பொங்கி எழுந்தார்கள் . கூடவே விவசாயிகள்,எளிய மக்கள்,கைவினைஞர்கள் தங்களின் கோடரி,கத்தி,கடப்பாரை ஆகியவற்றோடு இணைந்து கொண்டார்கள் . பகதூர் ஷாவை இந்தியாவின் அரசர் என அறிவித்தார்கள் . ஹிந்து முஸ்லீம்கள் சகோதரர் போல இணைந்து வீரம் காட்டினார்கள் . எங்கெல்லாம் இடங்களை பிடித்தார்களோ அங்கெல்லாம் பசுவதை தடை செய்யப்பட்டது . எந்த கேட்ரிட்ஜ் உணர்வுகளை தட்டி எழுப்பியதோ அதையே அரசுக்கு எதிராக பயன்படுத்தினார்கள் வீரர்கள்

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் ஆங்கிலேயருக்கு பெரும் சிம்மசொப்பனம் ஆனார் .பெண்கள் ஆயுதங்கள் ஏந்தி உடன் போரிட்டார்கள் . குவாலியரை கைப்பற்றி சாதித்தார் அவர் . பின்புறம் இருந்து ஒரு கயவன் தாக்க போர்களத்தில் உயிர் போனது . அவருக்கு அந்தரங்க பாதுகாவலர் ஒரு இஸ்லாமிய பெண் .

கான்பூரில் நானா சாஹிப் மற்றும் அவரின் தளபதி தாந்தியா தோப் கலக்கி எடுத்தார் . அசிமுல்லா எனும் அவர்களின் இன்னொரு தளபதி தொடர்ந்து மக்களை தட்டி எழுப்பினார் பீகாரில் குன்வார் சிங் தான் தலைமையேற்று நடத்தினார் . எண்பது வயதில் சிங்கம் போல அவர் போரிட்டார் .மெட்ராஸ் மாகாணத்தை சேர்ந்த மௌலவி அகமதுல்லாவும் பைஸாபாத்தில் வீரம் காட்டினார் .

மன்னர்கள் இவ்வளவு சிக்கல்களுக்கு உள்ளானாலும் இந்த புரட்சி ஒரு வகையில் தனித்துவமானது . ஆங்கிலேய அரசுக்கு எதிராக அதற்கு முன்னதாகவே நாற்பதுக்கும் மேற்பட்ட எழுச்சிகள் நடந்திருக்கின்றன . ஆனால் எளிய மக்களும் புரட்சியில் கலந்து கொண்டது இதை மக்கள் புரட்சியாக ஆக்கிற்று . இந்த எண்ணிக்கை உங்களுக்கு ஒரு புரிதலை தரலாம் . ஒன்றரை லட்சம் பேர் அவாதில் ஆங்கிலேயே அரசை எதிர்த்து இறந்து போனார்கள் . அதில் ஒரு லட்சம் பேர் எளிய மக்கள் . இந்தியாவின் பெரும் விடுதலைக்கனலை உண்டு செய்த இந்த வீரப்போர் ஒரு வருடம் நீடித்தது . இது இறுதியில் தோல்வி அடைந்தாலும் இந்தியர்கள் ஒன்றும் கோழைகள் இல்லை என ஆங்கிலேய ஆதிக்கத்தின் நெற்றிப்பொட்டில் அடித்து சொன்ன புரட்சி இது

- பூ.கொ.சரவணன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி