6 0 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு: தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2015

6 0 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு: தினகரன்


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 6வது ஊதிய குழுவால் பாதிக்கப்பட்டதுடன் பென்ஷன் திட்டத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பென்ஷன் திட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 40,000 பேரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில் 20 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வூதியத்தில் பாகுபாடு:

மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் 20 ஆண்டுகள் பணியாற்றி சர்வீஸ் இருந்தால் அவர்கள் ஓய்வு ஊதியத்துக்கு தகுதியுள்ளவராக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் தமிழகத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால்தான் ஓய்வு ஊதியம் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலர் முழு ஓய்வூதிய பலனை பெறமுடியாமலேயே பணி ஓய்வு பெறுகின்றனர்.


சொந்த பணத்தை செலவிடும் ஆசிரியர்கள்:

அரசு ஆண்டுதோறும் மாணவர்களுக்கு வழங்கும் 14 வகையான நலத்திட்ட பொருட்களை ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு சென்று எடுத்து வர வேண்டும். அதற்கான செலவுத் தொகையை அரசு கொடுப்பதில்லை. இந்த செலவை தலைமை ஆசிரியரோ அல்லது பள்ளி ஆசிரியரோ செலவிட வேண்டும். இந்த செலவுத் தொகையை மாணவர்களிடம் வசூலிக்க கூடாது.

பள்ளி பணியில் தொய்வு:

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை வாங்குவதற்காக மாவட்ட தலைமையிடத்துக்கு ஓராசிரியர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் செல்ல வேண்டும். இதனால் பள்ளியை மூடிவிட்டு செல்ல வேண்டும். இதனால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்களின் குற்றச்சாட்டுக்கும் ஆசிரியர் ஆளாக வேண்டி உள்ளது.

ஆரோக்கியத்துக்கு ஆப்பு:

பள்ளி ஆசிரியர்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடல்நிலை இருக்கும் என்று கூற முடியாது. ஆனால், அதையெல்லாம் அரசு கருத்தில் கொள்வது இல்லை. அவர்களை தேர்தல் வாக்குபதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்துகிறது. அந்த பணிக்கும் பயிற்சிக்கும் வராத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.ஆசிரியர்களுக்கு போதிய வசதிகள் மற்றும் சாப்பாடு போன்ற ஏற்பாடுகளை அரசு இயந்திரம் சரியாக செய்து கொடுப்பதில்லை. இதனால் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உள்ள ஆசிரியர்கள் அயல்பணிக்கு செல்லும் இடத்தில் அவதிப்படுகின்றனர். அவர்களில் பலர் பணி முடிந்து மருத்துவமனைக்கு செல்லும் நிலைதான் உள்ளது.

ஆசிரியைகளின் சங்கடம்:

ஆண்களை போல இத்துறையில் உள்ள பெண்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. ஒத்தையடி பாதை மட்டுமே உள்ள கிராம பள்ளி, மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் தினந்தோறும் பஸ்சில் சென்று வருவதற்குள் அவர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு அவர்களிடம் இல்லை என்றே கூறலாம். மேலும் பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் பள்ளி விழாக்களை முடிப்பதற்குள் இரவு ஆகிவிடுகிறது. அந்த சூழலில் பயந்த நிலையில்தான் உயிரை கையில் பிடித்தபடியே வீட்டுக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. சில நேரங்களில் அயல்பணிக்காக ஆசிரியைகள் வீடுவீடாக செல்லும்போது குடிகாரர்கள், ரவுடிகள் மற்றும் ஜொல்லர்களின் தொந்தரவுகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. இந்த அயல்பணிக்கு விருப்பம் இல்லையென்றாலும் கண்டிப்பாக போக வேண்டிய சூழல் உள்ளது.

அமைச்சர் பெயரில் அட்டகாசம்:

மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும் விழாக்களுக்கு அமைச்சர் வருகிறாரோ இல்லையோ, அவரின் பெயரை சொல்லி நிதி வசூலிப்பது அரசியல் கட்சிகளில் மட்டும் நடப்பது இல்லை.அமைச்சரின் பெயரைச் சொல்லி மாவட்ட அதிகாரிகள் ஒரு பள்ளிக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும். பள்ளிகளின் சார்பில் இந்த கண்காட்சியில் பங்கேற்க வேண்டும். மாணவர்களை பத்திரமாக அழைத்து வந்து அழைத்து செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்காக ஒரு வாரமாக வியாபாரிகள் மற்றும் நன்கொடையாளர்களை சந்தித்து பணம் சேகரிக்கின்றனர். சில நேரங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து பணத்தை தருகின்றனர். நிகழ்ச்சிக்கு வரும் அமைச்சருக்கு கேடயம், பட்டு சால்வை. சிக்கன், மட்டன் போன்ற உணவு வகைகள். அவர்களுடன் வரும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் என்று அனைத்து செலவுகளும் ஆசிரியர்களின் தலையிலேயே விழுகிறது. அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி அதிகாரிகள் அடிக்கும் கொள்ளைக்கும் அளவே கிடையாது.

பயிற்சி காலத்தில் சம்பளம் பிடிப்பு:

வருவாய் துறை, போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பயிற்சிக்காக செல்வது வழக்கம். அந்த பயிற்சி காலமும் பணிக்காலமாகவே கருதப்படும். ஆனால், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் நடத்தும் பயிற்சி, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் நடத்தும் பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் பயிற்சி காலமாக கணக்கில் எடுத்து கொள்வது இல்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி