தேர்வு நேரத்தில் பீதியூட்டும் எஸ்.எம்.எஸ்., அனுப்பாதீர்:அரசு, தனியார் பள்ளிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2015

தேர்வு நேரத்தில் பீதியூட்டும் எஸ்.எம்.எஸ்., அனுப்பாதீர்:அரசு, தனியார் பள்ளிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை


'பொதுத்தேர்வு மற்றும் ஆண்டுத்தேர்வு நடக்கும் நிலையில், தேவையற்றதகவல்களைஎஸ்.எம்.எஸ்., அனுப்பி, பீதியை ஏற்படுத்தாதீர்கள்' என, தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும், கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் துவங்குகிறது. இதேபோல், 10ம் வகுப்புக்கு, மார்ச் 19ம் தேதி பொதுத்தேர்வு நடக்கிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், சிலதனியார் பள்ளிகள், அதிக ஆர்வத்துடன் எதையாவது குளறுபடியாக செய்து, தேவையற்றபிரச்னைகளை ஏற்படுத்தி விடுகின்றன. சென்னை, வேளச்சேரியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி, பெற்றோருக்கு, இரு தினங்களுக்கு முன், ஒரு எஸ்.எம்.எஸ்., அனுப்பியது. அதில், 'பள்ளி மாணவர்கள், மூன்று பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதித்துள்ளது. எனவே, பெற்றோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு ஒரு வாரத்துக்கு அனுப்புவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த எஸ்.எம்.எஸ்., நர்சரி மாணவர்களுக்கு மட்டுமின்றி, பிளஸ் 2 மாணவர்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று பொதுத்தேர்வு துவங்கும் நிலையில், தனியார் பள்ளியின் இந்த தகவல், பெற்றோரையும், கல்வித் துறை அதிகாரிகளையும் அதிர்ச்சி அடையச்செய்தது. பள்ளியின் நடவடிக்கை குறித்து, விசாரித்து அறிக்கை தருமாறு, மெட்ரிக் பள்ளி ஆய்வாளருக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. இதே போல் கடந்த வாரம், வடசென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை என்று, முக கவசம் அணிந்து வகுப்பில் பங்கேற்றனர். இதனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சம் அடைந்து உள்ளனர்.இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள், நேற்று அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி மற்றும் ஆங்கிலோ இந்தியன் ஆய்வாளர் அலுவலகங்கள் மூலம் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, எச்சரிக்கைத் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், 'பொதுத்தேர்வு மற்றும் ஆண்டுத்தேர்வு துவங்கும் நிலையில், தேவையற்றதை, விழிப்புணர்வு தகவலாக அனுப்பி, பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் பீதி ஏற்படுத்த வேண்டாம். மாறாக, தேர்வுகளை பயமின்றி எழுதுவது, விடையளிக்கும் முறை, தேர்வுக்குத் தயாராகும் முறை குறித்து, நல்ல அறிவுரை வழங்குங்கள்' எனக் கூறப்பட்டு உள்ளது.

12 மணி நேர கட்டுப்பாட்டு அறை:

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களின் சந்தேகம் தீர்க்க, தேர்வுத் துறை இயக்குனரகம் சார்பில், 12 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு மொத்தம், நான்கு பணியாளர்கள், காலை, 8:00 மணி முதல் இரவு,8:00 மணி வரை, 'ஷிப்ட்' முறையில் பணியில் இருப்பர். கட்டுப்பாட்டு அறையை மாணவர்கள் தொடர்பு கொள்ள, 80125 94101, 80125 94116, 80125 94120, 80125 94125 ஆகிய மொபைல் போன்களில் தொடர்பு கொள்ளலாம்.

தடையில்லா மின்சாரம்:

கோடை வெயில் காரணமாக, மின் தேவை, வழக்கமான, 12 ஆயிரம் மெகாவாட்டை விட, 15 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என தெரிகிறது. இதனால் குடியிருப்புக்கு, மின்தடை நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும், தேர்வு மையங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வினியோகம் செய்ய, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். பிளஸ் 2 தேர்வு துவங்கியதில் இருந்து, 10ம் வகுப்பு தேர்வு முடியும் வரை, ஊழியர்கள், அலுவலகத்தில் இருக்க, உயர்அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

பிரச்னை இல்லை:

தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: பொதுத்தேர்விலோ, தேர்வு எழுதும் மாணவர்களிடமோ எந்தப் பிரச்னையும் இல்லை; தேர்வுகள் திட்டமிட்டபடி, அனைத்து ஏற்பாடுகளுடன் நடக்கும். ஆண்டுதோறும், சில மாணவர்கள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்கள் தனியாக அமர்ந்து தேர்வு எழுத வசதி செய்வதுவழக்கம். அதேபோல், இப்போதும் மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு இருந்தால், தனியாக அமர்ந்து தேர்வெழுத வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி