சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம்: ஏழு பள்ளிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2015

சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம்: ஏழு பள்ளிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னையில் 7 சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த பள்ளிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த என்.செல்வதிருமால் என்பவர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு இந்திய குடிமகனும் தேசிய கொடியையும், தேசிய கீதத்தையும் மதிக்க வேண்டியது கடமை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள முக்கியமான 7 சிபிஎஸ்இ பள்ளிகளில் காலையில் நடக்கும் இறைவழிபாட்டில் (அசெம்பிளி) தேசிய கீதம் பாடப்படுவதில்லை. அதனால் அங்கு பயிலும் மாணவர்கள் தேசிய கீதத்தின் முக்கியத்துவத்தை அறிய வாய்ப்பில்லை.

எனவே, மேற்கண்ட பள்ளிகளில் தினமும் காலையில் நடக்கும் அசெம்பிளியில் தேசிய கீதம் இசைக்கவோ அல்லது பாடவோ உத்தரவிட வேண்டும் என்று சென்னையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான மண்டல அதிகாரியிடம் கடந்தாண்டு ஆகஸ்டு 25-ம் தேதிமனு கொடுத்தேன். ஆனால், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து கடந்தாண்டு அக்டோபர் மாதம் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் டெல்லியில் உள்ள உதவி செயலாளரிடம் மனு அளித்தேன்.பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய “வந்தே மாதரம்” பாடலைப் பாடுகின்றனர். வேறு சில பள்ளிகளில் அவர்களுக்கான பள்ளிக்கூட கீதத்தைப் பாடுகிறார்கள். மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் அனைத்து மாநிலங்களின் அரசுப் பள்ளிகளில் மட்டும் தினமும் காலை தேசியகீதம் பாடப்படுகிறது.

இதுபோல சிபிஎஸ்இ உட்பட அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் பாடவும், சிபிஎஸ்இ பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கும்போது இதனை ஒரு நிபந்தனையாகச் சேர்க்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் கொண்டஅமர்வு இவ்வழக்கை விசாரித்து, சென்னையில் உள்ள முக்கியமான 7 சிபிஎஸ்இ பள்ளிகளையும் இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி