விடுமுறை குறித்து முறையான அறிவிப்பு இல்லை: கடும் அவதிக்குள்ளான பள்ளி மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2015

விடுமுறை குறித்து முறையான அறிவிப்பு இல்லை: கடும் அவதிக்குள்ளான பள்ளி மாணவர்கள்

தமிழக அரசின் முறையான அறிவிப்பு இல்லாததால், பள்ளி, கல்லுாரிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மாணவ, மாணவியர் கடும் அவதிக்கு ஆளாகினர்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவுக்கு, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக, நேற்று முன்தினம் இரவே, பல காட்சி ஊடகங்களில் செய்தி வெளியானது.


ஊடக செய்திகளை அதிகாரபூர்வமாக எடுத்துக் கொண்டு, பல தனியார் பள்ளிகள் விடுப்பு அறிவித்து, மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு, மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்பின.ஆனால், பள்ளி, கல்லுாரிகள் இயங்குமா அல்லது விடுமுறையா என்ற தெளிவான அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி செயலகங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.அதனால், தொடக்கப்பள்ளி, மெட்ரிக் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர்களும், கல்லுாரி கல்வி இயக்குனரும் எதையும், உறுதியாக சொல்ல முடியாமல் தவித்தனர்.

கல்லுாரிகள் செயல்பட்டன:

இந்நிலையில், நேற்று காலை, அரசுப் பள்ளி மற்றும் கல்லுாரிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலானஆசிரியர்கள், மாணவ, மாணவியர் வரவில்லை.பின், ஆசிரியர்கள் மட்டும், விடுமுறை இல்லை என்பதை அறிந்து, ஒரு வழியாக தாமதமாக பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர் மூலம், அப்துல் கலாமுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.இதேபோல், தனியார் பள்ளி, கல்லுாரிகளும் விடுமுறை இல்லை என்பதை, காலையில் தெரிந்து கொண்டு, 'பள்ளி, கல்லுாரிகள் இயங்கும்' என, மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு மொபைல்போனில் புதிய தகவலை அனுப்பின. இதனால், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர், அவசரமாக புறப்பட்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டது; மாணவ, மாணவியரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், நேற்று பிற்பகலில், அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.பல பள்ளிகளில், தகவல் பிரச்னைகளால், பள்ளி வேன், ஆட்டோக்கள் மற்றும் தங்களை அழைத்துச் செல்லும் பெற்றோர் வராததால், மாணவ, மாணவியர் நீண்ட நேரம் பள்ளி, கல்லுாரிகளுக்கு வெளியே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

பெங்களூரிலும் குழப்பம்:

அப்துல் கலாம் மறைவு தகவல் வெளியானவுடன், தனியார் 'டிவி' சேனல், 'அரசு விடுமுறை' என, செய்தி வெளியிட்டது. ஆனால், நேற்று காலை பத்திரிகைகளில், 'விடுமுறை இல்லை' என்ற செய்தியை பார்த்தவுடன், அவசர அவசரமாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவர்கள் புறப்பட்டனர்.அதேசமயம், அப்துல் கலாமை கவுரவிக்கும் விதமாக, பெரும்பாலான தனியார்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பெங்களூரிவில் அரசு பள்ளி, கல்லுாரி, பல்கலைக் கழகங்கள் வழக்கம் போல் இயங்கின. அங்கு, அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.'நான் உயிரிழந்தால், அரசு விடுமுறை அளிக்கக் கூடாது; அதற்கு பதிலாக, ஒரு நாள் கூடுதலாக பணியாற்றுங்கள்' என, அப்துல் கலாம், ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்ததால், மத்திய, மாநில அரசுகள் விடுமுறை அறிவிக்காமல், ஏழு நாள் துக்கம் அனுஷ்டிக்க தீர்மானித்துள்ளது.

வேடிக்கை பார்க்க கூடாது!

பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால், சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் வெளியாகும் போது, அதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.கே.பி.ஓ.சுரேஷ்,மாநிலத் தலைவர்,தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்

பொறுப்புணர்வு வேண்டும்!

முக்கியமான நேரங்களில், பள்ளி மற்றும் கல்லுாரி களுக்கான, கல்வித்துறை செயலர்கள் உடனடியாக முடிவெடுத்து, அதை அதிகாரபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால், ஊடகத்திலும் வதந்தி வெளியாகாமல் இருக்கும். இனியாவது அரசு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.பா.சிவராமன்,பொதுச் செயலர், அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம்

செயல்படாத அதிகாரிகள்:

எதிர்பாராத சம்பவங்கள் நிகழும்போது, இதுபோன்ற குழப்பம் ஏற்படுகின்றன. குழப்பத்தைத் தீர்க்க, அரசும், நிர்வாகமும் இருக்கின்றன. அதை உணராமல் செயல்படாத அதிகாரிகளும், அரசு இயந்திரமும் இருப்பதால், மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். ஊடகங்களும் வதந்திகளையோ, ஆதாரமற்ற தகவல்களையோ செய்தியாக வெளியிடக்கூடாது.'பாடம்' அ.நாராயணன், சமூக ஆர்வலர்,இயக்குனர், மாற்றம் இந்தியா அமைப்பு

ஏன் இந்த அலட்சியம்?

தமிழகத்திலே பிறந்து, அணு விஞ்ஞானியாக வளர்ந்து, ஜனாதிபதியாக, பதிவான ஓட்டுகளில், 90 சதவீதத்தை பெற்று, மக்கள் ஜனாதிபதி என்று, நற்பெயர் பெற்ற கலாமுக்கு, அஞ்சலி செலுத்துவதில் தமிழக அரசுக்கு, ஏன் இந்த அலட்சியம்? எந்த மாணவர்களை, இளைஞர்களை நேசித்தாரோ, அவர்கள் படிக்கும் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு, துக்கம் அனுசரிக்கும் வகையில், விடுமுறை விடுவதில் என்ன தயக்கம்? தமிழக அரசின் இந்த போக்கை, மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்.எனவே, தமிழக அரசு, ஏழு நாள் துக்கம் அனுசரிப்பதோடு, அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும் உடனே விடுமுறை அறிவிக்க வேண்டும்.இளங்கோவன்,தமிழக காங்., தலைவர்

தெளிவுபடுத்தி இருக்கலாம்!

தன் கடைசி மூச்சைக் கூட, மாணவர் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது நிறுத்தியவர், அப்துல் கலாம். அவருக்கு மரியாதை செலுத்த, விதியை காரணம் காட்டி, முட்டுக்கட்டை போடுவதை ஏற்க முடியாது. அப்துல் கலாம் மறைவுக்கு, விடுமுறை இல்லையெனில், அதை, தமிழக அரசு, முன் கூட்டியே தெளிவுபடுத்தியிருக்கலாம். நள்ளிரவுக்கு பின், பள்ளி ஆசிரியர்களை தொடர்பு கொண்ட, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், 'கண்டிப்பாக பள்ளிகளை நடத்த வேண்டும்' என, கட்டாயப்படுத்தி திறக்க வைத்துள்ளனர். அப்துல் கலாமை அவமதிக்கும் வகையிலான, தமிழக அரசின் இந்த நடவடிக்கையை, கடுமையாக கண்டிக்கிறேன்.ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி