தொழிற்சங்கங்கள் இன்று 'ஸ்டிரைக்': தமிழகத்தில் பஸ், ஆட்டோ ஓடுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2015

தொழிற்சங்கங்கள் இன்று 'ஸ்டிரைக்': தமிழகத்தில் பஸ், ஆட்டோ ஓடுமா?

கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அளவில், தொழிற்சங்கங்கள், இன்று, 'ஸ்டிரைக்' நடத்துவதால், பஸ், ஆட்டோக்கள் ஓடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வங்கி பணிகள் முடங்குவதோடு, மாநில அரசு அலுவலகங்களின் செயல்பாடும் பாதிக்கும் நிலை உள்ளது.'விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; புதிய சாலை பாதுகாப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்பது உள்ளிட்ட,12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐ.என்.டி.யூ.சி., - எச்.எம்.எஸ்., - ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், இன்று ஸ்டிரைக் அறிவித்துள்ளன.


வங்கிகள் இயங்காது:


இதனால், வங்கிப் பணிகள் முடங்குகிறது. ''தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட, ஒன்பது வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களில், ஏழு சங்கங்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்பதால், பெருமளவு வங்கிகள் இயங்காது,'' என, அனைத்து வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் கூட்டமைப்பின் செயலர் சீனிவாசன் கூறினார்.தமிழகத்தில், எல்.ஐ.சி., வருமான வரித்துறை, கணக்காயர் அலுவலகம், கல்பாக்கம் அணுசக்தி நிறுவனம், தபால் துறை, துறைமுகம், பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என, 1.50 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.தமிழக அரசு ஊழியர் சங்கம் மற்றும் பல முக்கிய துறைகளின் சங்கங்களும் பங்கேற்கின்றன. வருவாய்த்துறை அலுவலர்கள் முற்றிலும் பங்கேற்பதால், கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களின் செயல்பாடும் பாதிக்கும்.வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி, பொதுப்பணித்துறை, கூட்டுறவு, ரேஷன் கடை ஊழியர்கள், போக்குவரத்துத்துறை சங்கங்கள், கல்லுாரி ஆசிரியர் சங்கங்களும் இதில் பங்கேற்பதால், மாநில அரசின் முக்கிய அலுவலகங்கள், கல்லுாரிகள் செயல்பாடுகளிலும் பாதிப்பு ஏற்படும்.


1.5 லட்சம் பேர்:


இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வி கூறியதாவது:தமிழக அரசு ஊழியர் சங்கம், ஸ்டிரைக்கில் பங்கேற்கிறது. மொத்தமுள்ள, 3.15 லட்சம் நிரந்தர அரசு ஊழியர்களில், 1.5 லட்சம் பேர் பங்கேற்பர். பொதுவாக, மாநில அரசு அலுவலகங்களில், 50 சதவீத ஊழியர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்பர் என்பதால், பணிகள் பாதிப்பது தவிர்க்க முடியாதது.இவ்வாறு அவர் கூறினார்.வணிகர்சங்கங்கள், ஸ்டிரைக்கில் பங்கேற்காததால், கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். ரயில்வே ஊழியர் சங்கங்கள், ஸ்டிரைக்கிற்கு ஆதரவு தெரிவிக்காததால், ரயில் போக்குவரத்தில், எந்தவித பாதிப்பும் இருக்காது.

விடுப்பு எடுக்க தடை:


ஆனால், ஆட்டோ, பஸ்களின் இயக்கங்களில் பாதிப்பு ஏற்படும். ஆளுங்கட்சி தொழிற்சங்கமான, அண்ணா தொழிற்சங்கம் மூலமாகவும், புதிதாக பணியில் சேர்ந்தவர்களை கொண்டும், பஸ்களை தடையின்றி இயக்க முயற்சி நடந்து வருகிறது. டிரைவர், கண்டக்டர்கள், விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்,''மத்திய அரசை வலியுறுத்தியே, ஸ்டிரைக்நடக்கிறது; மாநில அரசுக்கு எதிராக அல்ல என்பதால், மாநில அலுவலகங்கள் செயல்பாட்டில் பாதிப்பு இருக்காது. ரேஷன் கடைகள், தாசில்தார் அலுவலக பணிகள் பாதிக்காத வகையில், முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி