பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கும் அங்கீகாரம் விதிமுறை தளர்ந்தது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2015

பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கும் அங்கீகாரம் விதிமுறை தளர்ந்தது!

அரசு நிர்ணயித்த அளவுக்கு, இடவசதி இல்லாத பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் பணி துவங்கியுள்ளது. இதனால், போதிய வசதிகள் இல்லாமல், சிறிய இடத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகள் எவ்வளவு பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என, தமிழக அரசு, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.


பரப்பளவு


மாநகராட்சி - ஆறு கிரவுண்ட்; மாவட்ட தலைநகர் - எட்டு கிரவுண்ட்; நகராட்சி - 10 கிரவுண்ட்; பேரூராட்சி - ஒரு ஏக்கர்; ஊராட்சி - மூன்று ஏக்கர் என, பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட பின், நீதிபதி சம்பத் கமிட்டி அளித்த பரிந்துரைப்படி, குறைந்த பரப்பளவில் செயல்படும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், 746 மெட்ரிக் பள்ளிகள், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கீகாரமின்றி இயங்கி வருகின்றன.இந்நிலையில், சட்டசபையில் பள்ளிக் கல்வி அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 'குறைந்த பரப்பளவில் இயங்கும் பள்ளிகளுக்கும், அங்கீகாரம் வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, மெட்ரிக் இயக்குனர் கடிதம் எழுதியிருந்தார்.


அரசாணை


அதன் அடிப்படையில், பள்ளிகளுக்கான பரப்பளவு நிபந்தனையை தளர்த்தி அங்கீகாரம் வழங்க, பள்ளிக்கல்வி துறை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக, இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குறைந்த பரப்பளவில் இயங்கும், 746 பள்ளிகளுக்கும், அங்கீகாரம் வழங்கும் பணி துவங்கியுள்ளது.அங்கீகாரம் வழங்குவதற்கு முன், பள்ளிக் கட்டடத்துக்கு உள்ளாட்சி திட்ட அனுமதிபெறப்பட்டிருக்கிறதா என்பதை மட்டும் ஆய்வு செய்ய வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், திட்ட அனுமதி இல்லாவிட்டாலும், அங்கீகாரம் வழங்க, மெட்ரிக் துறை உயரதிகாரிகள், வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.அதனால், பெட்டிக்கடை போல, சிறிய குறுகலான தெருக்களில், அடிப்படை பாதுகாப்பு வசதி இல்லாமல் செயல்படும் பள்ளிகளும், அங்கீகாரம் பெறும்முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில், பல பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கப்பட்டு விட்டதாக, மெட்ரிக் வட்டாரங்கள் கூறுகின்றன.


அரசு மீது வழக்கு?குழந்தைகள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, பெற்றோரின் கருத்தைக் கேட்காமல், மிகவும் குறுகலான இடங்களில் இருக்கும் பள்ளிகளுக்கும், அங்கீகாரம் அளிப்பதால், கும்பகோணம் சம்பவம் போல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, வழக்குத் தொடரவும், சில தொண்டு நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி