சிறந்த மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கான விருதுகள் - புதிய நெறிமுறைகள்:தமிழக அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2015

சிறந்த மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கான விருதுகள் - புதிய நெறிமுறைகள்:தமிழக அரசு உத்தரவு

சிறந்த ஊழியர், பணியாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில், அரசு விருதுக்கு மாற்றுத் திறனாளிகளைத் தேர்வு செய்வதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதீன் வெளியிட்ட உத்தரவு:


ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்றும், சர்வதேச மாற்றுத் திறனாளிகள்தினத்தன்றும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு விருதாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, விருதுகள் வழங்குவதற்கான புதிய நெறிமுறைகளை வகுத்துள்ளது.


அதன் விவரம்:


சிறந்த ஊழியர்கள்-சுயதொழில் பிரிவினர்:


பணிக்கு குறித்த நேரத்தில் வருவது, பிறரை அதிகம் சாராமல் சுயமாக இருப்பது, மாற்றுத் திறனாளி என்ற காரணத்துக்காக சிறப்புத் தொகை எதையும் கோராமல் இருப்பது, மாற்றுத் திறனாளி ஆன பிறகு கல்வித் தகுதியையும், தனது பணியிலும் நிலையை உயர்த்தியது ஆகிய காரணங்களைப் பெற்றிருக்க வேண்டும். அரசு, பொதுத் துறை நிறுவனங்களின் தலைவர்கள் மூலமாக அரசுக்கு விருதுக்கான பரிந்துரையை அனுப்ப வேண்டும்.சுயதொழில் பிரிவினர் என்றால், அந்தத் தொழிலை மிகச் சிறந்த முறையில் செய்து அதில் முக்கியப் பங்காற்றி இருக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டு வருவாய் சிறப்பாக இருப்பதுடன், அதிகளவு மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை அளித்திருக்க வேண்டும். சிறப்பான சாதனைகளைப் படைத்திருந்தால் அதற்கான ஆவணங்களை இணைக்க வேண்டும்.

சமூக-பொருளாதாரச் சூழலில் நிறுவனத்தைத் தொடங்கி, அதை சிறப்பான முறையில் நடத்தி வர வேண்டும்.சிறந்த ஆசிரியர்-சமூக சேவகர்: மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வி கற்பித்தலில் அளப்பரிய சாதனையைச் செய்திருக்க வேண்டும். விருதுக்கான விண்ணப்பத்தை பள்ளியின் ஒப்புதலுடன் அளித்திருக்க வேண்டும்.சிறந்த சமூக சேவகர் பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அரசுத் துறையில் பணியாற்றக் கூடாது.மாற்றுத் திறனாளிகளுக்காக தன்னார்வத் தொண்டு நிறுவனம் போன்ற அமைப்புகளில் பணியாற்றியிருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த தேசிய-மாநில விருதுகளையும் பெற்றிருக்கக் கூடாது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கல்வி போன்ற பணிகளில்ஈடுபட்டிருக்க வேண்டும்.

இந்த விருது ஒரே ஒரு முறை மட்டுமே அளிக்கப்படும்.கிராமப்புறங்களில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கவேண்டும்.சிறந்த நிறுவனம்-சிறந்த வேலை அளிப்போர்: கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையில் ஒரு நிறுவனம் ஈடுபட்டிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய சேவைகள்-புதிய உத்திகளை அளிப்பதுடன், கல்வி-பயிற்சி-மறுவாழ்வுப் பிரிவுகளில் சாதனைகளை நடத்திட வேண்டும்.அரசு நிதியுதவி அல்லது தனியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தவிருதுக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ ஆலோசனைகள், தெரபி சிகிச்சை அளிப்போரும் தகுதி படைத்தவர்கள். விருது பெற்ற பிறகு, 3 ஆண்டுகளுக்கு இதே விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.சிறந்த வேலை அளிக்கும் நிறுவனத்தின் பிரிவில் விண்ணப்பிக்க விரும்புவோர், 2 சதவீத மாற்றுத் திறனாளிகளை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கும் அதே ஊதியத்தை, மாற்றுத்திறனாளிகளுக்கும் அளித்தல், அவர்களுக்கு தங்குமிடம், போக்குவரத்து போன்ற இதர வசதிகளை கொடுக்கும் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.


சிறந்த ஓட்டுநர்-நடத்துநர்:


போக்குவரத்துத் துறையின் செயலாளர் மூலமாக சிறந்த நடத்துநர், ஓட்டுநருக்கு விண்ணப்பிக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.இந்த விருதுகள் அனைத்தும் தலா, 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழை அடக்கியது என தனது உத்தரவில் நசிமுதீன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி