இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் மத்திய அரசின் புதியன தொடங்குவோம் திட்டம்: ஜனவரி 16–ந் தேதி அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2015

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் மத்திய அரசின் புதியன தொடங்குவோம் திட்டம்: ஜனவரி 16–ந் தேதி அறிமுகம்

இந்தியாவில் புதியன தொடங்குவோம், எழுந்து நிற்போம்’ திட்டம் ஜனவரி மாதம் 16–ந் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதில் உள்ளதை பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்றதலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அப்போது நேயர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கிறார்.


இந்த ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நேற்று அவர் வானொலியில் 20 நிமிடங்கள் உரையாற்றினார்.அப்போது மோடி கூறியதாவது:–வரும் புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சி, புதிய நம்பிக்கை, உற்சாகம், வளர்ச்சி ஆகியவற்றை அளிக்கும் ஆண்டாக இருக்கட்டும். தீவிரவாதம், பூமி வெப்பமயமாதல், இயற்கை மற்றும் மனிதர்களால் உருவாக்கப்படும் செயற்கை பேரழிவுகள் இல்லாத ஆண்டாகவும் அமையட்டும்.கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது ‘இந்தியாவில் புதியன தொடங்குவோம், எழுந்து நிற்போம்’ (‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா’) என்ற திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் இந்த திட்டம் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. ஜனவரி மாதம் 16–ந்தேதி இத்திட்டத்தை மத்திய அரசு முழு உத்வேகத்துடன் தொடங்கும்.


சமூகத்தின் பின்தங்கிய நிலையில் இருக்கும் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு இத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோரும் புதுமை சிந்தனைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அரிய வாய்ப்புகளை புதியன தொடங்குவோம் திட்டத்தில் பெற இயலும். உற்பத்தி துறை, சேவைத்துறைஅல்லது விவசாயத்துறை என எந்த துறையில் வேண்டும் என்றாலும் அவற்றில் புதிய சிந்தனைகளும், புதிய வழிகாட்டுதல்களும், புத்தாக்கமும் இருக்கவேண்டும். ஏனெனில் புதுமை சிந்தனைகள் இல்லாமல் இந்த உலகம் முன்னேற முடியாது.அனைத்து மாநில அரசுகளும் இத்திட்டத்தை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் கொண்டு போய் சேர்க்கவேண்டும். இந்த திட்டம் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல. திறமையை வெளிக்காட்டும் அனைத்து பகுதி இளைஞர்களுக்கு உரியதாகவும் இருக்கும்.


இத்திட்டமானது, நாட்டில் உள்ள ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக்கழகங்கள், தேசிய தகவல் தொழில்நுட்ப கல்வி மையங்களுடன் இணைக்கப்படும்.புதிய தொழில்கள் தொடங்குவது, தொழில் முனைவதை ஊக்கப்படுத்துவது, வேலை வாய்ப்பை உருவாக்குவது ஆகியவற்றில் வங்கி கடன் அளிப்பதையும் இத்திட்டம் லட்சியமாக கொண்டு உள்ளது. ஜனவரி 16–ம் தேதியன்று இது தொடர்பான விரிவான பிரசாரத்தை உங்கள் முன்பாக வைப்பேன்.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி