தமிழக சட்டப்பேரவை 16ம் தேதி கூடுகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2016

தமிழக சட்டப்பேரவை 16ம் தேதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை வருகிற 16ம் தேதி காலை 11 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் 2016-2017ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவை  கூட்டம் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தில் கவர்னர் உரையுடன் கூடுவது  மரபு. அதன்படி, 2016ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 20ம்  தேதிகூடியது.


அன்றைய தினம் தமிழக கவர்னர் ரோசய்யா உரையாற்றினார். அதைத்தொடர்ந்து 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் வருகிற 16ம் தேதி காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் பேரவை தலைவர் தனபால் கூட்டியுள்ளார்.மேலும் அன்று காலை 11 மணிக்கு 2016-2017ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும் என்று சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் நேற்று அறிவித்துள்ளார். அன்றைய தினம் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் சமர்பிப்பார்.தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வருகிற மார்ச் மாதம் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனால், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில்  பல்வேறு கவர்ச்சிக்கரமான அறிவிப்புகளை  நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த பட்ஜெட் கூட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான இடைக்கால நிதி ஒதுக்கப்படும்.16ம் தேதி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் அன்றைய கூட்டம் முடிவடையும். இதையடுத்து பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு  கூட்டம் நடைபெறும். அதில் பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள்  நடத்துவது என்று விவாதிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். குறைந்தபட்சம் அந்த வாரம் முழுவதும் (4 நாட்கள்) கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சட்டப்பேரவைகூட்டத்தில் கெயில் விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்னை, 110வது விதியின் கீழ் முதல்வர் அறிவித்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது, ஆட்சி முடியும் தருவாயில் பலருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கியது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையானநிவாரண உதவி வழங்கப்படாமல் இருப்பது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும், அதிமுக தலைமையிலான தற்போதைய சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி