4 முக்கிய கோரிக்கைகள் நிறைவேறும் வரை அரசு ஊழியர்கள் போராட்டம் தொடரும்: மாநில தலைவர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2016

4 முக்கிய கோரிக்கைகள் நிறைவேறும் வரை அரசு ஊழியர்கள் போராட்டம் தொடரும்: மாநில தலைவர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.தொடர்ந்து நடைபெறும் அரசு ஊழியர் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடுஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது.


அந்த சங்கத்தைச் சேர்ந்த மாநில தலைவர் மோசஸ் 15–ந்தேதி (திங்கட்கிழமை) முதல் ஆசிரியர்களும் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளார்.இன்றும் (சனி) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை என்பதால் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும் எழுச்சி கூட்டம் நடத்துகின்றனர். 15–ந்தேதி முதல் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.மறியல் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் மாநில நிர்வாகிகள் சென்று அரசு ஊழியர்களை சந்தித்து போராட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி கூறியதாவது:–தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் 3 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 எங்களின் போராட்டத்திற்கு ஆசிரியர் கூட்டணி ஆதரவு தெரிவித்து உள்ளது. திங்கட்கிழமை முதல் அரசு ஊழியர்களுடன் ஆசிரியர்களும் மறியலில் ஈடுபடுவார்கள்.இன்றும் நாளையும் மாவட்ட தலைநகரங்களில் எழுச்சி கூட்டம் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நடக்கும் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் பங்கேற்கிறார்.எங்கள் போராட்டத்திற்கு தலைமை செயலக ஊழியர் சங்கம் தார்மீக ஆதரவு அளித்துள்ளது. திங்கட்கிழமை முதல் போராட்டம் தீவிரமாகும்.அமைச்சர்கள் 9–ந்தேதி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 11–ந்தேதி அறிவிப்பதாக கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

எங்களது 20 கோரிக்கைகளில் 4 மட்டும் முதல்– அமைச்சர் தலையிட்டு அரசாணை வெளியிடுவது தொடர்பானதாகும். மற்ற கோரிக்கைகள் துறை அதிகாரிகளின்மெத்தன போக்கு மற்றும் குறைபாடுகளை களைவது சம்பந்தமாகும். எனவே 4 முக்கிய கோரிக்கைகளை மட்டும் முதல்–அமைச்சர் ஏற்று அரசாணை வெளியிட வேண்டும். எனவே கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி