தலைமைச் செயலர் நேரில் ஆஜராகிறார்: அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் நீதிமன்றத்தில் இன்று விசாரணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2017

தலைமைச் செயலர் நேரில் ஆஜராகிறார்: அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி, தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கிறார்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசுஊழியர் சங்கங்கள் கூட்டு செயல் குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில், கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இருப்பினும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது.இதனால் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு செப். 15-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் ஆஜராகி, நீதிமன்ற தடையாணைக்குப் பிறகும் வேலைநிறுத்தத்தை தொடர்ந்த காரணம் குறித்து விளக்கம் அளித்தனர்.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மதித்து உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். அப்படி செய்தால் தலைமைச் செயலரை நீதிமன்றத்துக்கு வரவழைத்து உங்களது கோரிக்கையை கவனிக்க உத்தரவிடுவோம். மறுத்தால் போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்று தெரியும் எனக் கடுமையாகஎச்சரித்தனர்.

இதையடுத்து 9 நாட்களுக்குப் பிறகு வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்தி அன்று மதியமே அரசு அலுவலர்கள் பணிக்கு திரும்பினர்.பின்னர் நீதிபதிகள், அரசு ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இன்று (செப். 21) தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.

இந்த விசாரணையின்போது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள்நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி