உடைந்தது பெர்முடா முக்கோண ரகசியம்! ஆதாரப்பூர்வமான சாத்தியக் கூறுகளை முன்வைக்கிறது ஆஸ்திரேலிய விஞ்ஞானியின் ஆய்வறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2017

உடைந்தது பெர்முடா முக்கோண ரகசியம்! ஆதாரப்பூர்வமான சாத்தியக் கூறுகளை முன்வைக்கிறது ஆஸ்திரேலிய விஞ்ஞானியின் ஆய்வறிக்கை!

பெர்முடா முக்கோண ரகசியத்தை ஆதாரங்களுடன் உடைத்தார் ஆஸ்திரேலிய விஞ்ஞானி!

பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தாண்டி வான்வெளிகளையும், வேற்று கிரகங்களையும் அலசி பார்க்க முடிந்த நமது அதிநவீன அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியால், பூமியில் சுமார் 7,00,000 சதுர கிலோமீட்டர்களுக்குப்பறந்து விரிந்து கிடக்கும் கடல்பகுதியான பெர்முடா முக்கோணத்தை பற்றிய சரியான தெளிவை பெற முடியாதது ஏன்?
பெர்முடா முக்கோணம் 100 ஆண்டுகளில் 1000 உயிர்களைப் பலி கொண்டுள்ளது, அது மட்டுமல்ல அங்கே ஆண்டொன்றுக்குச் சராசரியாக 4 விமானங்கள் முதல் 25 க்கும் மேற்பட்ட படகுகள் வரை காணாமல் போகின்றன. ஆனால் அவை ஏன் காணாமல் போகின்றன? எங்கே அவற்றை மீட்டெடுப்பது என்பது குறித்து இதுவரையிலும் கண்டறியப்படாமலே இருந்து வந்தது.

ஆனால் இன்று கார்ல் க்ருஷெல்னிக் எனும் விஞ்ஞானி உலகமே தீர்க்க முடியாத ரகசியமக எண்ணி பயத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த ரகசியத்தை கண்டறிந்து அதில் எந்த விதமான வேற்றுகிரகவாசி ரகசியமும் இல்லை. இயற்கையின் மீதான சில மனிதத் தவறுகள் மற்றும் மோசமான சீதோஷ்ணம், மோசமான பூகோள அமைப்பு மட்டுமே பெர்முடா முக்கோணப் பகுதியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள், படகுகளும் காணாமல் போகக் காரணமே தவிர நிச்சயமாக உலகம் நம்புவது போல இதில் எந்த விதமான மர்மமும் இல்லை எனத் தெளிவாக தேவையான ஆதாரங்களுடன் விளக்கமும் அளித்திருக்கிறார்.

பெர்முடா முக்கோணம் என்பது வடக்கு அட்லான்டிக் பெருங்கடலில், மேற்குப்பகுதியில் உள்ள மர்மமான கடல் பரப்பாகும். பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் பகுதி தான் பெர்முடா முக்கோணம்..!

1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அன்று பெர்முடா முக்கோணத்திற்கு மேல் பறந்த அமெரிக்காவின் 5 போர் விமானங்கள் மாயமான பின் தான், பெர்முடா முக்கோணம் பற்றிய தகவல்கள் உலகம் முழுக்க பரவியது என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். ஆனால், கொலம்பஸ் மேற்கொண்ட கடல் பயணக்குறிப்பில் பெர்முடா முக்கோணம் இடம் பெறுகிறது. சர்கஸோ கடலில் பயணிக்கும் போது கொலம்பஸ் விட்டுச் சென்ற பயணக் குறிப்பின்படி, அக்டோபர் 8, 1492-ஆம் ஆண்டு தனது கப்பலில் அவர் பயன்படுத்திய திசைகாட்டி காம்பஸ் மிகவும் விசித்திரமான அளவீடுகளை காட்டியது என்று அவரது குறிப்புகள் கூறுகின்றன.

பெர்முடா முக்கோணம் பற்றி பலவிதமான மர்மமான காரணங்கள் கூறப்பட்டாலும் கூட அதற்கான உண்மையான காரணம் என்னவாக இருக்குமென இந்நாள் வரை மக்களுக்குத் தெளிவாக யாரும் விளக்கியதில்லை. ஏனெனில் பெர்முடா முக்கோணத்தைப் பற்றி விஞ்ஞானிகளிடையே நிலவி வந்த பல்வேறு கருத்து வேறுபாடுகளில் யாருடைய கோட்பாட்டை ஏற்றுக் கொள்வது? யாருடையது நம்பகமானது எனப் புரிந்து கொள்ள முடியாமல் மக்கள் எல்லாவற்றையும் நம்பத் தலைப்பட்டனர்.

பெர்முடா முக்கோணத்தைச் சார்ந்து இதுவரை 7 விதமான கோட்பாடுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அவற்றில் கடைசி 2 ஐத் தவிர மற்ற அனைத்துமே வேற்றுக்கிரக ஆராய்ச்சி மையம் பெர்முடா முக்கோணத்தில் அடியில் இருக்கிறது அதனால் தான் அந்த இடத்தைக் கடக்கும் போது மட்டும் விமானங்களும், கப்பல்களும் திசைக் குழப்பமடைந்து கடலுக்குள் மூழ்கியோ அல்லது வான்வெளியில் விபத்துக்குட்பட்டு தொலைந்து போகின்றன. அல்லது வேற்றுக்கிரகத்துக்குச் செல்லும் நுழைவாயில்பகுதி பெர்முடா முக்கோணத்தின் அடியிலிருந்து துவங்குகிறது சுமார் 10.000 ஆண்டுகளுக்கு முன்புய் பெர்முடா முக்கோணப் பகுதியில் வால்மீன் ஒன்று விழுந்து விட்டது, அதன் பின் விளைவுகள் தான் கப்பல்கள் மற்றும் விமானங்கள் காணாமல் போவதற்கான ரகசியங்கள் என்றனர் சில ஆய்வாளர்கள், மேலும் சிலரோ, பெர்முடா முக்கோணப்பகுதியில் கடலுக்கு அடியில் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட ஆழத்தில் ஏராளமான மீத்தேன் ஹைட்ரேட் குமிழிகள் உருவாகிக் கொண்டே இருப்பதால் அதன் காரணமாகவும் மேற்கண்ட அமானுஷ்ய விளைவுகள் ஏற்படலாம் என்றெல்லாம் விஞ்ஞானிகள் கூறி வந்தனர். ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி 6 மற்றும் 7 வது கோட்பாட்டின் படி சில விஞ்ஞானிகள் பெர்முடா முக்கோண ரகசியத்தை மனிதக் காரணிகள், மோசமான வானிலை மாற்றங்கள், அப்பகுதியில் நிலவி வரும் சீதோஷ்ண நிலை மாறுதல்கள், மேலும் அப்பகுதியிலிருக்கும் நீரோடைகளின் இயல்புகள் இவற்றை மையமாகக் கொண்டு ஆராய்ந்து பெர்முடா முக்கோண விபத்துக்களுக்கு முழுக்க, முழுக்க மனிதக் காரணிகளும் , அப்பகுதியில் நிலவும் வானிலை மாற்றங்களும், கடலுக்கடியிலான நில அமைப்புமே காரணம் என ஆதாரங்களுடன் மெய்ப்பித்தனர். இவர்கள் சொல்லும் காரணங்கள் எப்படிப்பட்ட பாதுகாப்புக் காரணிகளுடனான கப்பல்களையும், விமானங்களையும் கூட பாதிப்புக்கு உட்படுத்தப் கூடியதாம்.

மேற்கூறிய விஞ்ஞானிகளின் வாதத்தையே தான் சமீபத்தில் பெர்முடா முக்கோண ரகசியத்தை உடைத்தவர் எனும் பெருமை கொண்ட கார்ல் க்ருஷெல்னிக் எனும் விஞ்ஞானியும் முன் வைக்கிறார்.

பெர்முடா முக்கோண ரகசியம் என்பது ஆரம்பம் முதலே வேற்றுக்கிரகவாசிகளின் ஆராய்ச்சி ஊடுருவலோ அல்லது உலகின் தீர்க்க முடியாத மர்மமோ அல்ல; உலகின் மற்றெல்லா மாற்றங்களையும் போல லாஸ்ட் சிட்டி ஆஃப் அட்லாண்டிஸ் என்று குறிப்பிடப்படும் ‘பெர்முடா முக்கோண விளைவு’ க்கும் காரணம் மனிதத் தவறுகளே! அது மட்டுமல்ல, பெர்முடா முக்கோணப் பகுதியைச் சூழ்ந்துள்ள இடங்களில் நிலவும் மோசமான வானிலை, மிக, மிக அதிவேகத்திலான காற்று, அதிகமான கடல் போக்குவரத்து போன்றவையே இதற்கும் காரணங்களாகின்றன எனத் தன் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலிய விஞ்ஞானியான இந்த கார்ல் க்ருஷெல்விக் கூற்றுப்படி, பெர்முடா முக்கோணம் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்திருப்பதோடு அது உலகின் வளமான பிரதேசங்களில் ஒன்றான அமெரிக்காவுக்கு வெகு அருகில் இருப்பதாலும் அங்கே எப்போதுமே மிக அதிகமான போக்குவரத்து நெருக்கடி நிலவி வந்தது. இந்த அடிப்படையில் ஆராய்ந்தால் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இதுவரை காணாமல் போயிருக்கக் கூடிய விமானங்கள் மற்றும் கப்பல்களோடு ஒப்பிடுகையில் பெர்முடா பகுதியில் காணாமல் போனதாகச் சொல்லப் பட்ட விமானங்கள் மற்றும் கப்பல்களின் எண்ணிக்கையும் சமமாகவே இருக்கக் கூடும். சதவிகித ஒப்பாய்வில், அமெரிக்காவின் கடலோரப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் லண்டண் லில்லியாய்ட்ஸ் இரண்டும் அளித்த கூட்டறிக்கையின் அடிப்படையில் மேற்கண்ட முடிவிற்கு வரவேண்டியதாகிறது.

சிட்னி பல்கலைக்கழகத்தில் கம்யூனிகேட்டிங் சயின்ஸ் பிரிவில் ஆய்வு முனைவர் பட்டம் பெற்றுள்ளவரான விஞ்ஞானி கார்ல் கூற்றுப்படி, 1945 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் அட்லாண்டிக் பகுதியில் தமது வழக்கமான 2 மணி நேர போர்ப்பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருந்த ஃபிளைட் 19 எனும் அமெரிக்க ரோந்து விமானத்தின் 5 விமானங்களும் பெர்முடா முக்கோணப் பகுதியின் மேல் பறக்கையில் திடீரெனத் தனது 14 போர்வீரர்களுடன் காணாமல் போனது. விமானங்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து அதைத் தேடுவதற்காகவும், என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டும் அனுப்பப்பட்ட PBM மெரைனர் விமானமும் கூட  தேடுதல் வேலைக்காக அனுப்பப்பட்ட அதன் 13 பயணிகளுடன் எந்தவிதமான தடயங்களும் இன்றி பெர்முடா முக்கோணப் பகுதியில் காணாமல் போனது.

இப்படித்தான் பெர்முடா முக்கோண ரகசியம் என்பது கற்பனைவாதிகளுக்கு வளர்ச்சிக்குரிய ஒரு தொழில்காரணமானது. இதைத் தவிர்க்கும் நோக்கில் 1964 ஆம் ஆண்டில் எழுத்தாளர் வின்சென்ட் காடிஸ் ‘தி டெட்லி பெர்முடா டிரையாங்கிள்’ என்ற தலைப்பில் தனது கோட்பாடுகளைத் தொகுத்து ஒரு நூலாகவே வெளியிட்டார்.

அவரது கோட்பாட்டின் படி பெர்முடா முக்கோணப் பகுதியில் ரோந்து விமானங்கள் மற்றும் கப்பல்கள் காணாமல் போனது மர்மமாகவே இருந்தாலும் கூட அப்போதைய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த விவகாரத்துக்கு அமானுஷ்யக் காரணங்களைத் தேடுவதில் மட்டுமே கவனமாக இருந்தார்களே தவிர உண்மையான அறிவியல் காரணங்கள் என்னவாக இருக்கும் என ஆராயத் தவறிவிட்டார்கள். அமெரிக்க போர் விமானங்கள் காணாமல் போவது இதுவே அதன் வரலாற்றில் முதல்முறை என இந்த விஷயத்தை எமோஷனலாகவே கையாளத்தொடங்கினர். அறிவியல் பூர்வமான காரணமே கண்டுபிடிக்கப் படாமல் இப்படித்தான் கிட்டத்தட்ட பல பத்தாண்டுகளை விழுங்கியது பெர்முடா முக்கோண ரகசியம்.

காடிஸ் கோட்பாட்டின்படி, கடற்படையின் சிறப்பான ஆலோசனைகளைப் பெற்ற பிறகே ஃபிளைட் 19 ரோந்து விமானம் அந்தப் பகுதியில் பறக்கத் தொடங்கியது என்றாலும், விபத்து நடந்த அந்தநாளில் பெர்முடா பகுதியில் நிலவிய சீதோஷ்ண நிலை அத்தனை நல்லதாக இல்லை. 49 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பிச் சீறிக் கொண்டிருந்தன என்று பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்ல அந்த விமானத்தில் பறந்தவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே திறன் மிக்க பைலட் என்று சொல்லத்தக்கவராக இருந்தார் அவர் லெஃப்டினண்ட் சார்லஸ் டெய்லர். அவரது பிழைகளும் கூட அந்நாளைய மோசமான விபத்துக்கு முதல் காரணமாக இருந்திருக்க கூடும். ஏனெனில் பைலட் விமானத்தில் ஏறும் போதே நன்றாக மூக்கு முட்டக் குடித்திருந்தார். சுற்றிலும் என்ன விதமான வானிலை நிலவுகிறது என்பதையெல்லாம் யோசிக்காமலே அவர் விமானத்தை இயக்கத் தொடங்கி விட்டார். அதுமட்டுமல்ல இதற்கு முன்பே இருமுறை விமானத்தை மோசமாகக் கையாண்டு பழுதாக்கினார் என அவர் மீது குற்றச்சாட்டுகளும் கூட பதிவாகியிருந்தன. என்கிறார் கார்ல் க்ருஷெல்னிக்.

ரோந்து விமானம் காணாமல் போவதற்கு முந்தைய நொடியில் சிக்கிய விமான சங்கேத குறிப்புகளின் படி, லெஃப்டினண்ட் டெய்லர் விமானம் தனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை கண்டறிந்த போதும் கூட அதை அவர் தனது திசைகாட்டியின் தவறென்றே கருதினார். அவருடன் பறந்து கொண்டிருந்த ஜூனியர் பைலட் ஒருவர் அச்சூழ்நிலையிலும் விமானத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த தவறைத் திறமையாகக் கண்டறிந்து நாம் பறக்க  வேண்டியது மேற்குத் திசையில் என்று கூறிய போதும் அதை ஏற்றுக் கொள்ள மறுத்த லெஃப்டினண்ட் டெய்லர் தனது முடிவின் படி கிழக்கு நோக்கிப் பறந்து ஆழ்கடலின் மீது பெர்முடா முக்கோணப் பகுதியில் நிலவிய மோசமான வானிலையால் திசையறிவதில் குழம்பி விபத்துக்கு காரணமானவராகி விட்டார். அந்தப் பகுதியில் நிலவிய மோசமான காலநிலையால் தான் விமானம் வெடித்துக் கடலில் சிதறிய போதும் ஆழகடல் பகுதியில் விபத்துக்குள்ளானவர்களின் சடலம் கூட அகப்படாமல் போய் விட்டது.

இதைத்தான் காடிஸ் தனது கட்டுரைத் தொகுப்பில், அமெரிக்க ரோந்து விமானம் பெர்முடா முக்கோணத்தில் மறைந்த மர்மத்தை கொலம்பஸ் பஹாமா பகுதியை முதன்முதலாக அடைந்த போது அங்கே அவர் கண்ட அதிசய வெளிச்சத்தோடு ஒப்பிட்டு இரண்டுக்குமான காரணங்கள் இன்று வரை கண்டறியப்படவே இல்லை என எழுதினார்.

ரோந்து விமானம் மறைவதற்கு முன்பு கிடைத்த விமானிகளின் சங்கேதக் குறிப்புகளை முழுமையான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் சோதித்திருந்தால் விபத்துக்கான காரணம் மர்மம் இல்லை மனிதத் தவறும் மோசமான வானிலையும் தான் என்பது அப்போதே விளங்கி இருக்கும்.

பெர்முடா முக்கோண ரகசியத்தை விளக்க இதைப் போன்ற சரியான காரணங்களை முன்வைத்த ஆய்வுகள் முந்தைய ஆண்டுகளிலும் வெளிவந்துள்ளன என்றாலும் விஞ்ஞானி கார்லின் ஆய்வு மிகத் தெளிவுடன் தனது வாதத்தை முன் வைக்கிறது.

முதன்முதலாக பெர்முடா முக்கோணப்பகுதியில் விபத்துக்குள்ளான ரோந்து விமானம் அதன் விமானி மற்றும் அவரது தவறான முடிவுகளால் விமானத்தில் நேர்ந்த கோளாறுகள் மற்றும் அன்று அப்போது நிலவிய மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் தான் விபத்துக்கு உள்ளானதே தவிர அதி எந்த விதமான மர்மங்களும் இல்லை என உறுதியாக விளக்கப்பட்டது.

4 comments:

  1. Winners computerscience trb coaching centre erode.contact number 8072087722

    ReplyDelete
  2. WINNERS TRB COACHING CENTER.COMPUTER SCIENCE.ADDRESS :C.S.I.BOYS HR.SEC.SCHOOL.P.S.PARK.ERODE.CLASS STARTS:SUNDAY(1-10-17),TIME:9:30AM TO 4.00PM,CONTACT NUMBER:8072087722

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி