டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2017

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதனடிப்படையில், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்டுள்ள பின்வரும் அறிவுரைகளை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கவும், அவர்களது செயல்பாட்டினைக் கண்காணித்து டெங்கு ஒழிப்பை ஒரு இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

அறிவுறுத்தல்களின் விவரம்: பள்ளி வகுப்பறை மற்றும் கழிவறைகளைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். குடிநீர்ப் பானை மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்கப்பட வேண்டும்.
பள்ளி வளாகம் மற்றும் வீடுகளில் கொசுக்கள் முட்டையிட ஏதுவாக உள்ள தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், தட்டுகள், தண்ணீர் தொட்டிகள், பழைய கண்ணாடி, பிளாஸ்டிக் பாட்டில்கள், வடிகால்கள், பள்ளி கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள பொருள்கள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து தண்ணீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்க வேண்டும்.
மருத்துவரின் உதவியுடன் டெங்கு, சிக்குன்குன்யா காய்ச்சல் குறித்த அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்கள் காய்ச்சி வடிகட்டிய பாதுகாப்பான குடிநீரை அருந்த வேண்டுமென எடுத்துக் கூற வேண்டும். அதேபோன்று பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றும் மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
பள்ளிகளில் நடைபெறும் காலை இறை வணக்கக் கூட்டத்தின்போது, மாணவர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்த, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி