உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க ஓய்வூதியதாரர்களுக்கு டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2017

உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க ஓய்வூதியதாரர்களுக்கு டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு

உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க, ஓய்வூதியர்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர், தங்கள் உயிர்வாழ் சான்றிதழை (Life Certificate) ஆதார் எண்ணுடன் சேர்த்து டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்துக்குள் இந்தச் சான்றிதழை அளித்தால்தான் ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியம் பெற முடியும். இதனிடையே, இந்த ஆண்டு இச்சான்றிதழை சமர்ப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என தகவல் வெளியானதால் ஓய்வூதியதாரர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால், வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் கூட்டம் அலைமோது கிறது.இந்நிலையில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலீல் சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சென்னைமண்டலத்தில் மட்டும் 1.5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில், ராயப்பேட்டை அலுவலகத்தில் 75 ஆயிரம்பேரும், அம்பத்தூர் அலுவலகத்தில் 45 ஆயிரம்பேரும், தாம்பரம் அலுவலகத்தில் 35 ஆயிரம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். ஓய்வூதியம்பெறுவதில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்கும் வகையில், ஆண்டுதோறும் ஓய்வூதியம் பெறுவோர் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமாக உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.இந்நிலையில், மத்திய அரசு இந்த சான்றிதழுடன் ஆதார் எண்ணையும் சேர்த்து டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என கட்டாயமாக்கியுள்ளது. இதற்காக, ஓய்வூதியதாரர்கள் நேரில் வந்து தங்களுடைய கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இதற்காக எங்கள் அலுவலகத்தில் 15 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு நாள்தோறும் 2ஆயிரம் பேர் இச்சான்றிதழை சமர்ப்பித்து வருகின்றனர்.

இதற்கு இம்மாதம் 30-ம் தேதி கடைசி தேதி கிடையாது. டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதற்குள் தங்களுடைய உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தவறினாலும் ஓய்வூதியதாரர்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. ஜனவரியில்கூட இணைக்கலாம். ஆனால், முன்கூட்டியே இணைக்கத் தவறியதற்காக ஜனவரி மாதம் ஓய்வூதியம் கிடைக்காது. அதே நேரத்தில் பிப்ரவரி மாத ஓய்வூதியத்துடன் ஜனவரி மாத ஓய்வூதியமும் சேர்த்து வழங்கப்படும். மேலும், ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளைகளிலோ, அல்லது வீட்டருகே உள்ள இ-சேவை மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களிலோ சமர்ப்பிக்கலாம். பொது சேவை மையங்களில் இச்சான்றிதழை சமர்ப்பிக்க ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஓய்வூதியதாரர்கள் வெளியூரில் இருந்தாலும் அங்கு அருகில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திலோ அல்லது தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கியின் கிளைகளிலோ சென்று சமர்ப்பிக்கலாம். இவ்வாறு செல்லும்போது, தங்களுடைய ஓய்வூதிய சான்று, வங்கி பாஸ்புக் மற்றும் ஆதார் எண்ணை எடுத்துச்செல்ல வேண்டும். வங்கிகளும் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வரும் ஓய் வூதியதாரர்களை அலைக்கழிக்காமல் அவர்களிடம்இருந்து சான்றிதழைப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி