கம்யூட்டர் பட்டதாரிகளின் ஆசிரியர் கனவு: கலையாமல் காக்குமா தமிழக அரசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2017

கம்யூட்டர் பட்டதாரிகளின் ஆசிரியர் கனவு: கலையாமல் காக்குமா தமிழக அரசு.

தமிழகத்தில் இப்போது பல்வேறு அரசியல் குழப்பங்கள் இருந்தாலும், அரசு இயந்திரம் இயந்திரகதியாகவே இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆட்சியை மக்கள் விரும்பும் நல்லாட்சியாக காட்டிக் கொள்ள ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்கள் பங்குக்கு ஏதேதோ சொல்லிக் கொண்டும் செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள்.


குறிப்பாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிரடியாக பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.  நீட் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டப் பின் கல்வித் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்துவது போல் அவருடைய அறிப்புகள் இருந்தன என்றால் மிகையில்லை.

தமிழகத்தில் தொலைதூரப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களில் 30 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்.  புதுமையான கற்பித்தல் முறைகளைப் பின்பற்றுதல் உள்பட கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து விருதுகள் அளிக்கப்படும். அதன்படி, ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொடக்கப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி என நான்கு பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சமும், சான்றிதழ்களும் அளிக்கப்படும்.
 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சமும், சான்றிதழ்களும் கொடுக்கப்படும். தமிழக பிளஸ் 2 மாணவர்கள், 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில், மாநில அளவில், 412 பயிற்சி மையங்கள் திறக்கப்படும்.  

அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளுக்கு கணினி ஆசிரியர்கள் (748 காலியிடங்கள் 2 மாதத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றும் அறிவித்தார். ஆனால் இன்று வரை கணினி ஆசிரியர் பணி நியமனம் குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.  இந்த அரசின் எத்தனையோ திட்டங்கள், திட்டங்களாகவும் அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவும் கிடப்பது போல் அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பும் வெறும் கவர்ச்சி பேச்சாகி இருப்பதாகவே மக்கள் வருத்தம் கொள்கின்றன.

கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் படி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு வருடம் மட்டும் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு, அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 2005-ஆம் ஆண்டில் மாதம் ரூ. 4000 ஊதியத்தில் பகுதி நேரமாக நியமிக்கப்பட்ட 682 கணினி ஆசிரியர்களுக்குப் பிறகு நியமனம் கிடையாது. ஏற்கெனவே குறைந்த ஊதியத்தில் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் பல பள்ளிகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டிய நிலைதான் உள்ளது. தொடர்ந்து நீதிமன்ற வழக்கு, பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை போன்ற காரணங்களால் பி.எட். முடித்த கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாகினர்

இந்தப் பட்டதாரிகள் ஒருங்கிணைந்து 2014-ஆம் ஆண்டு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர். இச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் குமரேசன் கூறுகையில், 1992-ஆம் ஆண்டுல இருந்தே கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட். இருக்கு. நான் படிச்சது பி.எட். ஆனா,டெக்ஸ்டைல்ல வேலை பாத்துட்டு இருக்கேன்.

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 39,019கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள்வேலை இல்லாமஇருக்காங்க. ஒரு படிப்புனு இருந்தா அதுக்கான வேலை வாய்ப்பு இருக்கணும். வருஷா வருஷம் ஆயிரக்கணக்கான பேர் படிச்சுட்டு வெளியே வராங்க. ஆனா, ஏற்கெனவே படிச்சுவேலைவாய்ப்பு அலுவலகத்தில பதிவு செய்திருக்கிற யாருக்குமே வேலை இல்லை. பின்ன ஏன் இந்தப்படிப்ப இன்னும் வச்சிருக்காங்கன்னு புரியல" என்று குமுறுகிறார்

நன்றி:தினமணி

1 comment:

  1. உண்மையிலேயே தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருந்தால் இந்த ஆளும் அரசு கண்டிப்பாக கணினி அறிவியலை பள்ளியில் கொண்டு வந்து மாணவர்களுக்கு மட்டும் இன்றி ஆசிரியர்களுக்கும் அவர்களின் வேலைப் பளுவை குறைக்கும் வண்ணம் கணினி மயமாக ஆக்குவார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி