8 மணி நேரத்துக்கு மேல் வாடகைக் கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: தமிழக அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2017

8 மணி நேரத்துக்கு மேல் வாடகைக் கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: தமிழக அரசு உத்தரவு


ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கு மேல் வாடகைக் கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மோட்டார் வாகனச் சட்டத்தைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில சாலைப் பாதுகாப்பு ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் 2016-இல் 17,218 பேரும் 2017-இல் (அக்டோபர் மாதம் முடிய) 14,077 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சாலை விபத்துகள் குறித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில் 90 விழுக்காடு சாலை விபத்துகள் நீண்ட நேரம் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களுக்கு உண்டாகும் களைப்பு மற்றும் மன உளைச்சல்களால் ஏற்படுகிறது எனத் தெரியவருகிறது.
தமிழகத்தில் ஏற்படக்கூடிய சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளுக்கு சுற்றுலா வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. அவர்களால் ஏற்படும் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் பொருட்டு 1988-ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சட்டம் 1961-இல் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட வரையறைகளை கடைப்பிடிக்குமாறு தகுந்த அறிவுரைகள் சாலைப் பாதுகாப்பு ஆணையரால் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஒரு நாளுக்கு 8 மணி நேரத்திற்கு மிகாமலும், ஒரு வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மிகாமலும் மற்றும் வாரத்துக்கு ஒரு நாள் ஓய்வுடன் வாகனங்களை இயக்குதல் வேண்டும்.

சுற்றுலா வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் ஒரு பணி முடித்த பின்னர் தொடர்ச்சியாக அடுத்த பணி செய்ய வலியுறுத்தக் கூடாது.
ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை மற்றும் தனி நபர் விபத்துக் காப்பீடு அவசியம் வைத்திருத்தல் வேண்டும். சட்டவிதிகளை மீறும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை தாற்காலிகமாகத் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சட்டவிதிகளை மீறும் வாகனத்தின் அனுமதிச் சீட்டு மற்றும் தகுதிச்சான்றுகள் போக்குவரத்துத் துறையினரால் புதுப்பிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் பொருட்டு சட்ட விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி