100வது பயணம் வெற்றி: 'இஸ்ரோ' புதிய சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2018

100வது பயணம் வெற்றி: 'இஸ்ரோ' புதிய சாதனை


 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செலுத்திய, 100வது செயற்கைக்கோள் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.


நிலப்பரப்பு மற்றும் போக்குவரத்து திட்டமிடலுக்கு உதவும், 'கார்டோசாட் - 2' உட்பட, மூன்று இந்திய செயற்கைக்கோள்களுடன், பல்வேறு நாடுகளின், 28 செயற்கைக்கோள்களும், இந்த பயணத்தின் போது செலுத்தப்பட்டன.

இஸ்ரோ, 1975ல், முதல் செயற்கைக்கோளை செலுத்தியது. அந்த வரிசையில், 100வது செயற்கைக்கோளை நேற்று செலுத்தி சாதனை படைத்துள்ளது. பி.எஸ்.எல்.வி., - சி 40 ராக்கெட் மூலம், கார்டோசாட் - 2 உட்பட, மூன்று இந்திய செயற்கைக்கோள்கள், அமெரிக்கா, பிரிட்டன் உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 28 செயற்கைக்கோள்கள் என, மொத்தம், 31 செயற்கைக்கோள்கள் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.

கடந்த, 2017 ஆகஸ்டில், பி.எஸ்.எல்.வி., - சி 39 ராக்கெட், தொழில்நுட்பக் காரணங்களால் பயணத்தை துவங்குவதற்கு முன், தோல்வியில் முடிந்தது. அதனால், நேற்றைய செயற்கைக்கோள்கள் ஏவுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், விரைவில் ஓய்வு பெற உள்ள, இஸ்ரோ தலைவர், கிரண் குமார் தலைமையில் நடக்க உள்ள, கடைசி செயற்கைக்கோள் ஏவுதல் இதுவாகும்.

ஆந்திராவின், ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள, இஸ்ரோவின் விண்வெளி மைய தளத்தில் இருந்து, நேற்று காலை, 9:28 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., - சி 40 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி, 17 நிமிடத்தில், பூமியில் இருந்து, 505 கி.மீ., உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில், கார்டோசாட் - 2 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மற்ற செயற்கைக்கோள்களும், அவற்றின் சுற்றுப்பாதைகளில் நிறுத்தப்பட்டன.

கார்டோசாட் வகை செயற்கைக்கோள்களில், இது, ஏழாவது செயற்கைக்கோளாகும். இதில், பூமியின் குறிப்பிட்ட பகுதியை படம் பிடித்து அனுப்பும் கேமராக்கள் உள்ளன. இது, நகர மற்றும் கிராமப்புற மேம்பாடு, போக்கு வரத்து மேம்பாடு, ரயில், சாலை போக்குவரத்து திட்டமிடல், கடலோர நிலப்பகுதியை முழுமையாக பயன்படுத்த திட்டமிடல் போன்றவற்றுக்கு உதவுகிறது.

''இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது, நாட்டு மக்களுக்கு அளிக்கும் புத்தாண்டு பரிசு,'' என, இஸ்ரோ தலைவர், கிரண் குமார் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில், 31 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

6 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி