உங்களிடமே நீங்கள் போட்டி போடுங்கள்: மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2018

உங்களிடமே நீங்கள் போட்டி போடுங்கள்: மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை

உங்களிடமே நீங்கள் போட்டி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து மாணவ -மாணவிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கலந்துரையாடல் புத்தகவடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை மாணவ -மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, கிண்டி ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியது:மனதை ஒருமுகப்படுத்துவதென்பது கற்றலினால் வருவதல்ல. இறந்தகாலம் என்பது ஒரு சுமை; எதிர்காலம் என்பது கனவு; நிகழ்காலத்தில் தற்சிந்தனையுடன் வாழ்வதே மனதே ஒருங்கிணைக்க வழிவகுக்கும்.

உங்களிடமே போட்டி போடுங்கள்:

மற்றவர்களை ஒப்பிட்டு அவர்களுடன் போட்டி போடுவதைவிட உங்களிடமே நீங்கள் போட்டி போட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனித்திறமை உண்டு.

ஒவ்வொரு நாளும் நாம் ஏற்கெனவே செய்த சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைக்க முயற்சி செய்யும் போதுதான், தன்னம்பிக்கை வளர்ந்து சிறந்த சாதனையாளராக உருவாக முடியும்.மாணவ -மாணவிகள் நேரமே இல்லை என்று ஒருபோதும் கூறக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் உள்ளது. ஒருவர் தமக்கு நேரமே இல்லை என்று கூறுவாராயின், அவர் அவருடைய நேரத்தையும் வேலைகளையும்சரிவர திட்டமிடாதவராக கருதப்படுவார் என்று ஆளுநர் புரோஹித் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த 50 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு புத்தகங்கள் அளிக்கப்பட்டன. இதில், ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் ஜெகந்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி