அரசு நீட் நுழைவுத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: நாளை முதல் மீண்டும் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2018

அரசு நீட் நுழைவுத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: நாளை முதல் மீண்டும் தொடக்கம்

பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால் 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான இலவச சிறப்பு வகுப்புகள் வியாழக்கிழமை (ஏப்.5) முதல் மீண்டும் நடைபெறவுள்ளன.

மத்திய அரசு நடத்தும் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக இலவசப் பயிற்சி மையங்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு தொடங்கியது.
தொடக்கத்தில் 100 மையங்களில் 20,000 மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்தப் பயிற்சி, பிப்ரவரி மாத இறுதியில் 70,000 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஒரு ஊராட்சிக்கு ஒரு மையம் வீதம் மொத்தம் 412 மையங்களில் இந்த மையங்கள் செயல்பட்டுவந்தன.
இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கியதால் பிப்ரவரி 3-ஆவது வாரம் முதல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பிளஸ் 2 வகுப்பில் கணிதமும், அறிவியலும் இணைந்த பாடப்பிரிவு மாணவர்களுக்கு திங்கள்கிழமையுடன் (ஏப்.2) பொதுத்தேர்வு முடிவடைந்தது. இதையடுத்து 412 பயிற்சி மையங்களிலும் நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், ஸ்பீடு அகாதெமி நிர்வாகிகள் ஆகியோர் கூறியது:-
நாடு முழுவதும் மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் மட்டுமே இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.
நீட் நுழைவுத் தேர்வுக்கு 8,233 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு 412 மையங்களிலும் ஏப்.5 முதல் ஏப்.20-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக அனைத்து நாள்களிலும் பயிற்சி வழங்கப்படும். ஏப்.20-ஆம் தேதிக்குப் பிறகு, தேர்வு மூலம் 2,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தமிழகம் முழுவதும் 9 இடங்களில் விடுதியுடன் கூடிய இலவசப் பயிற்சி 15 நாள்கள் வழங்கப்படும்.

பிளஸ் 1 மாணவர்களுக்கும் வாய்ப்பு: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே பயிற்சி பெற்ற மாணவர்களும் இதில் பங்கேற்கலாம். அதேபோன்று அரசுப் பள்ளிகளைச்சேர்ந்த பிளஸ் 1 மாணவர்கள் ஏப்.9- ஆம் தேதி பொதுத்தேர்வு முடிந்ததும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி