அகத்தியரால் அடைபட்டவளே
இன்றைய நாள் -
அரசியலால் தடைபட்டவளே!
இந்த அரசியலில்தான்
எத்தனை"கரு நாடகம்"?
இரங்காதோ அந்தக்
கர்நாடகம்?
விநாயகனால்
விடுவிக்கப்பட்டவளே
வெறிநாய்களால் - மணல்
விற்றழிக்கப் பட்டவளே
இப்போதிருப்பது - நாங்களும்
எங்கள்
கண்ணீர்ச் சுரப்பிகளும் மட்டுமே
பசுமையாயிருந்த
விவ"சாயம்" வெளுத்து விட்டது.
முப்போகம் முளைத்த பூமியில்
வெறும் சோகம் - அங்கே
வறட்சியின் வைபோகம்
காவிரி என்றாலே
"கை விரி" என்கிறது அரசியல்
நீர்ப்புடவை அணிந்து
நெடுக நடந்தவளே - இங்கு
துச்சாதன விரல்களுக்குத்
துணி இழக்க மறுத்து
தூரமாய் நின்றாயோ!
நரிகள் என்று இங்கு
நாடாளத் தொடங்கிற்றோ-அதுமுதலே
நதிகள் இப்பூமியை
நனைக்க மறுத்தன.
காவிரித்தாயே - நீ
உதித்த இடம் வேறாயினும் -உன்னைத்
துதித்த இடம் இப்பூமி - நீ
குதித்த இடம் எம் இதயம்!
விதித்தவறால் சில வீணர்களை
மதித்தமையால் - இன்று
நதித்தடத்தை இழந்து
நடுத்தெருவில் நிற்கின்றோம்.
மாநில அரசும்
மத்திய அரசும் இணைந்து - ஒரு
பூ நிலப் பொய்கையின்
புனலழித்து விட்டீரே !
வேளாண்மை செய்த ஜனம்- இன்று
மேலாண்மை அமைப்பிற்காய்
மெய் வருந்தி நிற்கிறது.
பெற்றதாயின் கற்பையே
பேசி விற்பவர் மேல்
பற்று வைத்து வாக்களித்தால்
புற்று வைக்கும் பூமியெங்கும்.
வாக்களிக்கக் காசு வாங்கி
வக்கற்றுப் போனவரால்
நெல்கொழிக்கும் நிலமெல்லாம்
செல்லரித்துச் சீரழியும்.
வாய்ப்புக்களைத் தவறவிட்டு -வெறும்
வாய்ப் பூக்களால் வசியம் செய்தோரை
வாழவைத்த காரணம்தான் - இன்று
உடம்பெங்கும் புண் - ரணம்தான்
இருமாநில அரசியலாரும்
எட்ட நில்லுங்கள் - இனி
கன்னட உழவனும் - மனம்
கன்றிய தமிழனும்
கலந்து பேசட்டும்.
நதியன்னையே! எம் நிலத்திற்கு
நீரூற்ற வா! -
தவறினால் உழவரின் சவத்திற்குப்
பாலூற்றும் பரிதாபப்
பாவம் உனைச் சேர்ந்துவிடும்
-------------------------------------------------------------
சமர்ப்பணம்: கவர்ச்சியில் மயங்காமல்
காசு வாங்காமல் வாக்களித்த
கண்ணியத் தமிழர்களுக்கு...
Thanks to Mr.Radhakrishnan
நெகிழ வைக்கும் வரிகள்...
ReplyDeleteகாவிரித் தாயே கருணை காட்டு
விடியலுக்காய் ஏங்கும் எம்
ஏழை விவசாயிகளுக்கு..😢😢😢
அருமை
ReplyDeleteஅருமை
ReplyDeleteநரிகள் என்று இங்கு
ReplyDeleteநாடாளத் தொடங்கிற்றோ-அதுமுதலே
நதிகள் இப்பூமியை
நனைக்க மறுத்தன. Vounmai