10ம் வகுப்பு தேர்வு: 94.5 சதவீதம் 'பாஸ்' : கடந்த ஆண்டை விட 0.1 சதவீத தேர்ச்சி அதிகம் : கணிதம், தமிழில் குறைந்தது தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2018

10ம் வகுப்பு தேர்வு: 94.5 சதவீதம் 'பாஸ்' : கடந்த ஆண்டை விட 0.1 சதவீத தேர்ச்சி அதிகம் : கணிதம், தமிழில் குறைந்தது தேர்ச்சி



பத்து லட்சம் பேர் எழுதிய, பத்தாம் வகுப்பு தேர்வில், 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர், 96.4 சதவீதமும்; மாணவர்கள், 92.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 16 முதல், ஏப். 20 வரை நடந்தது. 7,083 மேல்நிலை பள்ளிகள், 5,253 உயர்நிலை பள்ளிகள் என, 12 ஆயிரத்து, 336 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் என, 10.01 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.

தேர்வு முடிவுகள் நேற்று காலை, 9:30 மணிக்கு, தேர்வுத் துறையின் இணையதளத்தில் வெளியானது.மேலும், மாணவர்கள் பதிவு செய்த அலைபேசிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆகவும், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 2017ஐ விட, 0.1 சதவீதம் அதிகமாக, 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், பத்தாம் வகுப்பில், அதை விட அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வில் பங்கேற்ற, 4.76 லட்சம் மாணவியரில், 96.4 சதவீதம் பேரும்; 4.74 லட்சம் மாணவர்களில், 92.5 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவியர், 3.9 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

100 சதவீதம்: மொத்தமுள்ள, 12 ஆயிரத்து, 336 பள்ளிகளில், 5,584 பள்ளிகளின் மாணவ - மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5,456 அரசு பள்ளிகளில், 1,687 அரசு பள்ளிகளின் மாணவ - மாணவியர், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதியோரில், 2.06 லட்சம் பேர், 401 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றுள்ளனர். இவர்களில், 1.02 லட்சம் பேர் மாணவியர்; 1.27 லட்சம் பேர் மாணவர்கள்.


பாடவாரியான தேர்ச்சியில், வினாத்தாள் கடினமாக கருதப்பட்ட கணிதத்தில், 96.18 சதவீதம் என்ற, குறைந்த தேர்ச்சி கிடைத்துள்ளது. 
தமிழில், 96.42 சதவீத தேர்ச்சி உள்ளது.அதிகபட்சமாக, அறிவியலில், 98.47 சதவீதம் பேர்; ஆங்கிலம், 96.50 மற்றும் சமூக அறிவியலில், 96.75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,443 மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஒரு மணி நேரம் கூடுதல் சலுகை பெற்று, தேர்வு எழுதினர்.அவர்களில், 88.97 சதவீதமான, 3,944 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறை கைதிகளில், 186 பேர் தேர்வு எழுதி, 76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாநில, மாவட்ட அளவில் யார் முதலிடம், இரண்டாம், மூன்றாம் இடம் என்ற, 'ரேங்கிங்' முறை, இரண்டாவது ஆண்டாக, இந்த ஆண்டும் வெளியிடப்படவில்லை.இதனால், மாணவர்கள் இடையே, யார் முதல் இடம் பிடிப்பது என்ற, மன அழுத்தம் நிறைந்த போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பெற்றோரும், மற்ற மாணவர்களை ஒப்பிடாமல், தங்கள் பிள்ளைகள் என்ன மதிப்பெண் என்பதை பார்த்து, அதன்படி பிளஸ், 1 படிக்க வைக்க திட்டமிட துவங்கியுள்ளதால், மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி