+1 பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியாகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2018

+1 பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியாகிறது.  மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போனில் எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பொதுத் தேர்வுகள் நடப்பது போல பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு மார்ச் 7ம் தேதி முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7070 மேனிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு படித்த 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ, மாணவியரும், தனித் தேர்வர்களாக 1753 மாணவ, மாணவியரும் எழுதினர்.

பள்ளி மாணவர்களில் அறிவியல் பாடத் தொகுதியில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 819 பேர், வணிகவியல் பாடத் தொகுதியில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 703 பேர், கலைப் பாடத் தொகுதியில் 13 ஆயிரத்து 969 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதுதவிர சிறைக்கைதிகள் 62 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் நாளை காலை  9 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் இந்த இணைய தளங்களில் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம். பிளஸ் 1 தேர்வு எழுதியோருக்கு இணைய தளம் மூலமாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.

அரசுத்தேர்வுத்  துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்று வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும். ஜூன் 4ம் தேதி பிற்பகல் முதல் மாணவர்கள் தங்கள் பள்ளி அல்லது தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.dge.tn.nic.in  இணைய தளத்தில் இருந்தும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மதிப்பெண் பட்டியல்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர் கையெழுத்து போட்டிருந்தால் மட்டுமே செல்லும்.

பிளஸ் 1 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு  விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி மற்றும் தேர்வு எழுதிய மைங்கள் மூலமாக ஜூன் 1, 2, 4ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் பெற்ற பிறகே மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி