அரசு ஊழியரின் பதிவேடு விவரங்களை கணினிமயமாக்கும் பணிகள் அக்டோபருக்குள் நிறைவடையும்: கருவூலக் கணக்குத்துறை தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2018

அரசு ஊழியரின் பதிவேடு விவரங்களை கணினிமயமாக்கும் பணிகள் அக்டோபருக்குள் நிறைவடையும்: கருவூலக் கணக்குத்துறை தகவல்

அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு விவரங்களை கணினிமயமாக்கும் பணி வரும் அக்டோபர் மாதத்துக்குள் நிறைவடையும் என கருவூலக் கணக்குத்துறை முதன்மைச் செயலர் சு. ஜவஹர் கூறினார்.

சென்னை வடக்கு சம்பளக் கணக்கு அலுவலகத்தில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் திறனூட்டல் பயிற்சிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் சு. ஜவஹர் பேசியதாவது:நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடக்க மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன.இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள், மென்பொருள் உருவாக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 29,000 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப்பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும்.இத்திட்டத்தின் மூலம், சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் உடனுக்குடன் பதியப்படும். இப்பணியை வரும் அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை உள்ள பணி வரலாறு முழுமையாக கணினி மயமாக்கப்படும்.

இதன் மூலம், பணிப் பதிவேடுகளை பல்வேறு அலுவலகங்களுக்கு இடையேயும், வெவ் வேறு ஊர்களுக்கு இடையில் பணிப் பதிவேடுகள் மாற்றப்படுவதால் ஏற்படும் காலவிரயம் குறைவதோடு, பணிப்பதிவேடு காணாமல் போகக் கூடிய நிலையும் ஏற்படாது. பணிப் பதிவேடுகள்அவ்வப்போது கணினி மூலம் ஆய்வு செய்யப்படுவதால் நடவடிக்கைகள் உடனுக்குடன்எடுக்கப்பட்டு ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும்.இவ்வாறு ஜவஹர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி