வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு அபராதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2018

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு அபராதம்


வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, 1,000, 5,000, 10 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கும் நடைமுறை, இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.
எனவே, வரும், 31ம் தேதிக்குள், கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என, வருமான வரித்துறை, கண்டிப்பான ஆணை பிறப்பித்துள்ளது. அதன்பின், தாக்கல் செய்யப்படும் வரி கணக்குகளுக்கு, அபராதம் உண்டு என்றும், இந்த மதிப்பீட்டு ஆண்டுக்கான கணக்கை, 2019 மார்ச், 31க்கு பின், தாக்கல் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு:

வருமான வரி சட்டத்தின் கீழ், தங்கள் கணக்குகளுக்கு தணிக்கை தேவைப்படாத பிரிவினர், 2018 - 19ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான, அதாவது, 2017 - 18ம் நிதியாண்டிற்கான, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, வரும், 31ம் தேதிகடைசி நாள். மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் வாயிலாக வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் ஆகியோர், இந்த வகையின் கீழ் வருகின்றனர். வருமான வரி கணக்கை, அதற்குரிய நாளான, வரும், 31க்கு முன்னதாக தாக்கல் செய்பவர்களுக்கு கட்டணம் எதுவுமில்லை.

மொத்த வருமானம், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ளவர்கள், வருமான வரி கணக்கை, வரும், 31க்கு பின், 2019 மார்ச் மாதத்திற்கு முன் தாக்கல் செய்தால், 1,000 ரூபாய் தாமத கட்டணமாக செலுத்த வேண்டும்.மொத்த வருமானம், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள், கணக்கை இந்த மாதத்திற்குப்பின், வரும் டிசம்பருக்கு முன்னதாக தாக்கல் செய்தால், 5,000 ரூபாய் தாமத கட்டணம் செலுத்தியாக வேண்டும். மொத்த வருமானம், ஐந்து லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருப்போர், வருமான வரி கணக்கை, 2018 டிச., மாதத்திற்கு பின், 2019 மார்ச் மாதத்திற்கு முன் தாக்கல் செய்தால், 10 ஆயிரம் ரூபாய் தாமத கட்டணம் செலுத்த வேண்டும்.வருமான வரி சட்டத்தின், புதிய நடைமுறைகளின் படி, சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு ஆண்டின் இறுதிக்கு பின், எந்தவித வருமான வரி கணக்கும்தாக்கல் செய்ய இயலாது. உதாரணமாக, மதிப்பீட்டு ஆண்டான, 2018 - 19க்கு, மார்ச், 2019க்கு பின், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது. இதற்கு முன், 2020 மார்ச், 31 வரை அவகாசம் தரப்பட்டிருந்தது.மேலும், அனைத்து வரி செலுத்துவோரும், தங்கள் வருமான வரி கணக்குகளை, மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும்.

மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் ஒரே ஒரு வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் அல்லது தோராய வருமானம் உடையவர், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.வருமான வரி செலுத்துவதற்கு வசதியாக, சென்னை, நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவன் வளாகத்தில், வருமான வரி கணக்கு, முன் தயாரிப்பு கவுன்டர்கள் செயல்படும்.இவை, அனைத்து வேலை நாட்களிலும், இம்மாதம், 16ம் தேதி முதல் ஆக., 3 வரை செயல்படும். வரி செலுத்துவோர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி