இனி ஆண்டுக்கு இரண்டு நீட் தேர்வுகள் நடத்த CBSE முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2018

இனி ஆண்டுக்கு இரண்டு நீட் தேர்வுகள் நடத்த CBSE முடிவு!

சி.பி.எஸ்.இ.,யால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த, 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு, ஐ.ஐ.டி., படிப்புகளுக்கான, ஜே.இ.இ., மற்றும் பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான, 'நெட்' தேர்வுகளை, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை என்ற புதிய அமைப்பு இனி நடத்தும்,
'' என, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார்.

ஆண்டுக்கு இரு நீட் தேர்வு, எதில் அதிக மதிப்பெண் பெறுவரோ, அது ஏற்கப்படும்; ஆண்டு முழுவதும் இலவச பயிற்சி உள்ளிட்ட பல்வேறுஅறிவிப்புகளால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'உயர் கல்விகளுக்கான நுழைவுத்தேர்வுகளை, தன்னாட்சி அதிகாரம் பெற்ற சிறப்பானதொரு அமைப்பின் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்' என, மத்திய நிதி அமைச்சர் பதவி வகித்து வந்த அருண் ஜெட்லி, 2017 - 18பட்ஜெட்டில் அறிவித்தார். இதையடுத்து, இந்த தேர்வுகளை நடத்த, தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டது.

இது தொடர்பாக, 2017, நவம்பரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தேசிய தேர்வு முகமை என்ற தனி அமைப்புக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு, ஐ.ஐ.டி., படிப்புகளுக்கான, ஜே.இ.இ., மற்றும் பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான, 'நெட்' எனப்படும், தேசிய தகுதி தேர்வு ஆகியவற்றை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தி வந்தது. 'இந்த தேர்வுகளை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பு நடத்தும்' என, மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடத்தப்பட்டு வந்த நீட், ஜே.இ.இ., தேர்வுகள், இனி, ஆண்டுக்கு, இருமுறை நடத்தப்படும்.நீட் தேர்வுகள், பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும். மாணவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகின்றனரோ, அதுவே ஏற்கப்படும். ஜே.இ.இ., தேர்வுகள், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான, நெட் தேர்வுகள், டிசம்பர் மாதம் நடத்தப்படும். இந்த தேர்வுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்படுகின்றன. இதற்காக, அனைத்து நகரங்கள்,கிராமங்களில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகளில், அரசு கணினி பயிற்சி மையங்கள் துவங்கப்பட உள்ளன. இந்த மையங்களில், மாணவர்கள் ஆண்டு முழுவதும், இலவச பயிற்சி பெறலாம். இதன் மூலம், கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு முன், தங்களை சிறப்பாக தயார் செய்து கொள்ள முடியும். இந்த மையங்கள், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செயல்படும். விருப்பம் உள்ள அனைவரும், இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம். ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் இருந்து,இலவச கணினி பயிற்சி மையங்கள் செயல்பட துவங்கும். இதுகுறித்த விரிவான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்.

ஒவ்வொரு தேர்வும், நான்கு அல்லது ஐந்து நாட்களில் நடத்தப்படும். இதில், பாடத்திட்டம், கேள்வி வடிவம் மற்றும் தேர்வு எழுதும் மொழியில் மாற்றம் எதுவும் இல்லை. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வு,புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, தேசிய தேர்வு முகமை மூலம், முதல் முறையாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகள், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மென்பொருள் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படும். சர்வதேச தரத்தில் நடைபெறும் புதிய தேர்வு முறையில், கேள்வித்தாள் வெளியாவது போன்ற முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார். ஆண்டுக்கு இரு, 'நீட்' தேர்வு, எதில் அதிக மதிப்பெண் பெறுவரோ, அது ஏற்கப்படும்; ஆண்டு முழுவதும் இலவச பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிபுணர்கள் குழு தயார்!

புதிய தேர்வு நடைமுறையை, சிறப்பாக செயல்படுத்த, கல்வி நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், புள்ளியியல் ஆய்வாளர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோரை, அரசு நியமனம் செய்ய உள்ளது. இவர்களின் உதவியுடன், தேர்வு முறையில் எதிர்கொள்ளப்படும் நடைமுறை சிக்கல்கள் சரி செய்யப்படும்.வினா தாள்களை வடிவமைக்க, நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. கேள்விகளை தயார் செய்வதில், அவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பர்.நிபுணர் குழுவுக்கான உறுப்பினர்கள், தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவர்கள் விரைவில், தேசிய தேர்வு முகமையில் இணைந்து பணியாற்றுவர் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி