School Morning Prayer Activities - 20.07.2018 ( Kalviseithi's Daily Updates... ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2018

School Morning Prayer Activities - 20.07.2018 ( Kalviseithi's Daily Updates... )


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

உரை:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

பழமொழி :

A little stream will run a light mill

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

பொன்மொழி:

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

 -நியேட்சே.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்?
எட்வர்ட் டெய்லர்

2.அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?
ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்

நீதிக்கதை :

புகழ் போதை - நீதிக் கதைகள்
(Puzgal Bothai - Neethi Kathaigal)


மாணிக்கம், கேசவன் இருவரும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள். நல்ல வசதிபடைத்தவர்கள். இருவரும் நண்பர்கள். ஆனால், குணத்தில் இருவரும் நேர்மாறானவர்கள்.

கேசவன் யாருக்காவது ஒரு சிறு கஷ்டம் என்றாலும் உதவி செய்வதற்கு முன்னால் நிற்பான். ஊரில் அவனை அனைவரும், “கலியுக கர்ணன்” என்று புகழ்வர்.

மாணிக்கம் அவனுக்கு நேர் எதிராக இருந்தான்.

அவனை அனைவரும், “சுயநலக்காரன்” என்று ஏசினர்.

மாணிக்கம், கேசவன் அடுத்தடுத்த காட்டை விலைக்கு வாங்கினர்.

கேசவன் தன் காட்டை அழித்து, கனிமரங்களை உருவாக்கினான். கிணறு வெட்டி அவற்றிற்கு நீர் பாய்ச்சினான். சில ஆண்டுகளுக்குப்பின் அந்த மரங்கள் கனிகளை வாரி வழங்கின.

மாணிக்கம் தன் நண்பனைப் போல் காட்டை அழிக்காமல், மரங்களை நடாமல், அப்படியே விட்டு விட்டான். அதனால், அவனுடைய காட்டில் முள் புதர்கள் சேர்ந்து விட்டன. கேசவன் தன்னுடைய பழத்தோட்டத்திற்கு போக வேண்டுமென்றால் மாணிக்கத்தின் காட்டு வழியாகத்தான் போக வேண்டும்.

ஒருநாள், கேசவன் மாணிக்கத்தின் காட்டு வழியாகப் போய்க் கொண்டிருந்த போது, அவன் காலில் நாலைந்து முட்கள், “நறுக் நறுக்” என்று குத்தி ரத்தம் கொட்டியது.

அதன் காரணமாக கோபம் கொண்ட கேசவன் மாணிக்கத்தைப் பார்த்து திட்டினான். அதனால், இருவருக்கும் சண்டை உண்டாகி நட்பு முறிந்தது. அதனால் அவர்கள் அன்று முதல் பேசிக் கொள்வதேயில்லை.

நாட்கள் சென்றன- ஒருநாள் கேசவன் தன் தோட்டத்தில் விளைந்த பழங்களை எல்லாம் பறித்து, ஊரிலுள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கினான். மகிழ்ச்சி கொண்ட ஊர் மக்கள் அனைவரும் அவனை வாழ்த்தினர்.

இப்படியே ஊரிலுள்ளவர்கள் வாழ்த்த வாழ்த்த கேசவனுக்கு புகழ்வெறி பிடிக்கத் தொடங்கியது. கேசவன் ஊரையே அழைத்து ஆயிரக்கணக்கில் செலவு செய்தான். மக்களுக்கு தேவையானதை வாரி, வாரி இறைத்தான்.

மக்களும் அவன் வீட்டு வாசலில் குவிந்தனர். கேசவனும் புகழ் வெறியில், மக்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்து வந்தான்.

அந்த சமயத்தில் அங்கு வந்து சேர்ந்த மாணிக்கம் கூட்டத்தினரை நோக்கி, “ஊர்மக்களே! நீங்கள் யாருடைய பணத்தில் ஆட்டம் போடுகிறீர்கள் தெரியுமா?” என்று கேட்டான்.

எல்லாரும் விழித்தனர்.

“இது என்னுடைய பணம்”. கேசவன் தந்தை தன்னுடைய நிலங்களை எல்லாம், என் தந்தையிடம் விற்று பணம் வாங்கியிருந்தார். ஆனால், நட்பு காரணத்தால், கேசவன் தந்தையின் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ளாமல் விட்டுவிட்டார்.

என் தந்தை இறந்து போனபிறகு இந்த விஷயம் இதுவரை எனக்கு தெரியவில்லை. இன்று நான் என் தந்தையின் பழைய பெட்டியை குடைந்தபோது அதில் கேசவன் தந்தை என் தந்தைக்கு எழுதிக் கொடுத்த கிரயப் பத்திரத்தைக் கண்டு எடுத்தேன்.

“அதனால்... இன்றுமுதல் கேசவனுடைய சொத்துக் கெல்லாம் நானே சட்டப் பூர்வமான சொந்தக்காரன். இதுவரை அவன் ஊருக் கெல்லாம் வாரி வழங்கினான். இனிமேல் நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் எல்லாரும் வீட்டிற்கு போங்கள்,” என்று சொன்னான்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கேசவனுக்கு தலைசுற்றியது. மயக்கம் வருவது போலிருந்தது. குழம்பிப் போய் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தான்.

மாணிக்கம் பேச்சைக் கேட்ட ஊர் மக்கள் அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். மக்களை நோக்கி, “போகாதீர்கள் போகாதீர்கள்!” என்று கத்தினான் கேசவன். அதற்கு அவர்கள்...

“போய்யா! போ. இனியும் உன் பேச்சைக் கேட்பதற்கு நாங்கள் ஒன்றும் மடையர்கள் இல்லை. இனி நீயும் எங்களைப் போல் ஒரு ஏழைதான்,” என்று கூறிவிட்டு, “வாருங்கள் போகலாம்!” என்று ஒருவன் கையசைக்க, அனைவரும் அவனைத் தொடர்ந்து சென்றனர்.

அனைவரும் சென்றவுடன் தன்னிந்தனியாக கவலையோடு ஒன்றும் புரியாமல் நின்றிருந்த கேசவன் தோளில் தட்டிய மாணிக்கம், “வா உள்ளே போகலாம்,” என்றான்.

கேசவன் எதிலும் விருப்பமின்றி, வெறுப்புடன் அவனுடன் சென்றான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் மாணிக்கம் வயிறு வலிக்கச் சிரித்தான்.

ஒன்றும் புரியாதவனாய் கேசவன் விழிக்க, மாணிக்கம் கேசவனை நோக்கி, “அதிர்ந்து விட்டாயா? உன் தந்தை என் தந்தையிடம் நிலங்களை விற்கவும் இல்லை. என் தந்தை வாங்கவும் இல்லை.” பிறகு நான் ஏன் பொய் சொன்னேன் என்று பார்க்கிறாயா?

நீ இரக்கம் காரணமாக மக்களுக்கு கண்மூடித்தனமாக வாரி இரைத்தாய். உன்னைப் புகழின் உச்சியில் வைத்து மதுவை விட அதிகமான போதையை உண்டாக்கி உன்னால் லாபம் அடைந்து வந்தனர் மக்கள். “அவர்களை அடையாளம் காட்டவே, இனி உன் சொத்துக்கெல்லாம் நானே சொந்தக்காரன் என்று சொன்னேன். இதைக் கேட்டு நீ ஒன்றுமில்லாதவன் என்று தெரிந்த ஊர் மக்கள் நீர் இல்லாத குளத்தை விட்டு காக்கைகள் பறந்து செல்வதைப் போல், உன்னை விட்டு ஓடிவிட்டனர். இந்த நன்றி கெட்டவர்களிடம் இனி, நீ எப்படி நடக்க வேண்டாம்?” என்றான் மாணிக்கம்.

“நண்பா! என்னை வஞ்சித்து வாழ்ந்தவர்களை உன்னால் அடையாளம் கண்டு கொண்டேன். இனி ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போடுவேன். புகழ் போதையில் மூழ்க இருந்த என்னை கைகொடுத்து தக்க சமயத்தில் காப்பாற்றி விட்டாய், உனக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை,” என்று நா தழுதழுக்க கூறினான் கேசவன்.

நீதி: இரக்கம் காட்டலாம். ஆனால், ஏமாளியாகி விடக்கூடாது.

இன்றைய செய்தி துளிகள் : 

1.சி.பி.எஸ்.இ. பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது: உயர்நீதிமன்றம் உத்தரவு

2.குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு

3.2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு

4.தமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்களில் லைசென்ஸ் பெற ‘ஹெச் டிராக்’ முறை

5.911 புள்ளிகள் பெற்று அசத்தல் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் கோஹ்லி தொடர்ந்து முதலிடம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி