School Morning Prayer Activities - 03.09.2018 ( Kalviseithi's Daily Updates... ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2018

School Morning Prayer Activities - 03.09.2018 ( Kalviseithi's Daily Updates... )


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:42

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

உரை:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

பழமொழி :

Be first at a feast and the last to slander

பந்திக்கு முந்து, படைக்கு பிந்து

பொன்மொழி:

இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம்.
ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது.

- ஸ்ரீசாரதாதேவி.

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.அக்டோபர் முதல் வாரத்தை அரசு ______________ வாரமாக கொண்டாடி வருகிறது?
வனவிலங்கு

2.சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்?
ஆர்.கே. சண்முகம் செட்டியார்

நீதிக்கதை :

கருநாக பாம்பும், காகமும்
(The Crow and the Snake - Short Story)

அது ஒரு அழகிய கிராமம். அக்கிராமத்தில் ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தில் இரு காகங்கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன.

அந்த ஆலமரத்தின் கீழ் பகுதியில் பெரிய பொந்து ஒன்று இருந்தது. அந்தப் பொந்தை ஒரு கரும்பாம்பு உறைவிடமாகக் கொண்டிருந்தது.

பெண் காகம் தனது கூட்டில் முட்டைகள் இட்டுக் குஞ்சுகள் பொறிக்கும்.

ஆண் காகமும், பெண் காகமும் இரைதேடச் செல்லும் நேரம் பார்த்து பொந்தில் இருக்கும் அந்த பாம்பு மரத்தின் மீது ஏறி காக முட்டைகளை தின்றுவிட்டு இறங்கி விடும்.

திரும்பி வந்து பார்க்கும் போது முட்டைகள் காணாமல் போய் விட்டது கண்டு காகங்கள் மிகவும் மன வேதனை அடையும்.

ஒவ்வொரு தடவையும் பெண் காகம் குஞ்சு பொரிப்பதும், அவற்றை கருநாகம் உண்பதும் வழக்கமான நிகழ்ச்சியாகி விட்டன.

ஒரு நாள் அந்த பாம்பு முட்டைகளை சாப்பிட போகும் நேரத்தில் கூட்டிற்கு வந்த பெண்காகம் பார்த்துவிட்டது. காகத்தை பார்த்த பாம்பு முட்டைகளை சாபிடாமல் சென்று விட்டது.

குஞ்சுகள் காணாமல் போவதற்கு மரத்தடிப் பொந்தில் வாழும் கருநாகந்தான் காரணம் என்பதைக் காகங்கள் கண்டு கொண்டன.

ஆனால் காகங்களால் கருநாகத்தை என்ன செய்ய முடியும்? தலைவிதியே எனச் சில காலத்தை ஓட்டின.

திரும்பத் திரும்ப தன் குஞ்சுகளை இழக்கும் அவலத்தைப் பெண் காகத்தால் சகித்துக் கொள்ள இயலவில்லை.

ஒருநாள் பெண் காகம் ஆண் காகத்தை பார்த்து, "நமது குஞ்சுகளையெல்லாம் ஒவ்வொரு தடவையும் கருநாகம் தின்று விடுகின்றதே! இனியும் இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த மரத்தை விட்டு விட்டு வேறு ஒரு பாதுகாப்பு நிறைந்த மரத்திற்குக் குடி போய் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவோம்" என்று கண்ணீருடன் கதறியது.

பெண் காகம் கூறியதைக் கேட்டு மன வேதனையுற்ற ஆண் காகம் தன் மனைவியை நோக்கி "உன் மனக்குமறல் எனக்கு புறிகிறது! சில விஷயங்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கின்றது. நீண்ட காலமாக வசித்து வரும் இந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்குச் செல்ல என் மனம் கேட்கவில்லை. ஆனால் அதற்காகக் கரும்பாம்பின் அட்டூழியத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் கூற மாட்டேன். ஏதாவது ஒரு உபாயம் செய்து இந்த பாம்பைக் கொன்றாக வேண்டும்" என்று ஆண் காகம் கூரியது.

"இந்தக்கொடிய விஷ கருநாகத்தை நம்மால் கொல்ல முடியுமா?" என்று சந்தேகத்தோடு பெண்காகம் கேட்டது.

"கருநாகத்தைக் கொல்லும் அளவுக்கு வலிமையோ வல்லமையோ எனக்கு இல்லை என்பது உண்மைதான். ஆனால் நல்ல அறிவாற்றல் மிக்க நல்ல நண்பர்கள் பலர் எனக்கு இருக்கிறார்கள். அவர்களிடம் யோசனை கலந்து இந்தக் கருநாகத்தை நிச்சயமாக என்னால் ஒழித்துக் கட்ட முடியும்" என்று ஆவேசத்துடன் கூறியது ஆண் காகம்.

பிறகு பெண் காகத்தை பார்த்து, "பாம்பைக் கொல்ல உடனடியாக நடவடிக்கை மேற் கொண்டாக வேண்டும். நீ பத்திரமாக இரு. நான் நண்பன் ஒருவனைச் சென்று பார்த்துவிட்டு விரைவில் திரும்பி வருகிறேன்" என்று கூறிவிட்டு புறப்பட்டது.

சிறிது தொலைவில் வசித்து வந்த ஒரு நரி காகத்தின் நெருக்கமான நண்பன். நல்ல அறிவாற்றலும் தந்திர சுபாவமும் படைத்த அந்த நரியைத் தேடிக்கொண்டு காகம் அங்கு போய்ச் சேர்ந்தது.

நரி தன் நண்பன் காகத்தை மகிழ்சியுடன் வரவேற்றது.

"நண்பனே, நான் வாழும் மரத்தடியில் வசிக்கும் கருநாகம் செய்யும் அட்டூழியத்தை எல்லாம் மன வேதனையுடன் நரியிடம் எடுத்துக் கூறி, அதை கொல்வதற்கு நீதான் எனக்கு ஏதாவது ஒரு உதவி கூற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது.

நரியும் நல்ல உபாயம் ஒன்றைக் காகத்திற்குக் கூறி, "நண்பனே, இந்த யோசனையைச் செயற்படுத்து, கருநாகத்தின் ஆயுள் முடிந்துவிடும்" என்று சொல்லியது.

காகம் நண்பன் நரியிடம் விடைபெற்றுக் கொண்டு உடனே அதன் யோசனையைச் செயற்படுத்தும் முயற்சியினைத் தொடங்கியது.

அந்த நாட்டின் அரசி வழக்கமாக நீராடும் குளக்கரைக்குச் சென்று காகம் ஒரு மரத்தில் மறைவாக அமர்ந்து அரசியின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் அரசி தனது தோழிகளுடன் குளத்திற்கு வந்து சேர்ந்தாள்.

தன்னுடைய விலை உயர்ந்த ஆபரணங்களையெல்லாம் கழற்றிக் கூரைமீது வைத்துவிட்டு அரசி நீராடுவதற்காக குளத்தில் இறங்கினாள்.

காகம் உடனே பறந்து வந்து மிகவும் மதிப்புமிக்க முத்துமாலை ஒன்றைத் தனது அலகால் கொத்தி எடுத்துக் கொண்டு பறந்தோடியது. அந்த எதிர்பாராத நிகழ்ச்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அரசியும் தோழிகளும் கூக்குரலிட்டனர்.

உடனே சில தோழிகள் சென்று காவலர்களிடம் நடந்த நிகழ்ச்சியைக் கூறினார்கள்.

காவலர்கள் பறந்து செல்லும் காகத்தைத் துரத்திக் கொண்டு கூச்சலிட்டவாறு பின் தொடர்ந்து சென்றார்கள்.

காகம் பறந்தவாறு நேராகத் தான் குடியிருக்கும் ஆலமரத்திற்குச் சென்றது.

அதற்குள் காவலர்கள் அந்த மரத்தருகே வந்து சேர்ந்தார்கள்.

காகம் தனது அலகில் கொத்திப் பிடித்திருந்த அரசியின் அணிகலனை காவலர்கள் கண் பார்வையில் படும் விதமாக கருநாகத்தின் பொந்துக்குள் போட்டு விட்டது.

காவலர்கள் கரும் பாம்புப் புற்றை இடித்து நகையைத் தேடினார்கள்.

புற்றுக்குள் இருந்த கருநாகம் சீறிக்கொண்டு வெளியே வந்தது.

காவலர்கள் அந்தக் கருநாகத்தைக் தடியால் அடித்துக் கொன்றனர்.

பிறகு புற்றை நன்றாக இடித்துப் பெயர்த்து அரசியின் அணிகலனைத் தேடி எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

அதன் பிறகு அந்தக் காகக் குடும்பம் நிம்மதியாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்க்கை நடத்த தொடங்கியது.

இன்றைய செய்தி துளிகள்:

1.10, 11, 12 வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வு: செப்.10-இல் தொடக்கம்

2.பெரு வெள்ளத்தில் இருந்து மீண்டுவரும் கேரளாவை அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல்....

3.கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சேலத்தில் 1080 பள்ளி குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு சாதனை

4.துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடுவின் ஓராண்டு அனுபவங்கள்: நூலை வெளியிட்டார் பிரதமர் மோடி

5.ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்திய அணி அறிவிப்பு: கோஹ்லிக்கு ஓய்வு

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி