School Morning Prayer Activities - 17.09.2018 ( Kalviseithi's Daily Updates... ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2018

School Morning Prayer Activities - 17.09.2018 ( Kalviseithi's Daily Updates... )


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:52

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

உரை:
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

பழமொழி :

Better go to bed sleepless than rise in debt

கடனில்ல சோறு கால் வயிறு போதும்

பொன்மொழி:

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை

 -எமர்சன்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?
பத்மா சுப்ரமணியம்

2.ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?
செப்டம்பர் 5


நீதிக்கதை

இரண்டு பாறைகள் - Two Rocks 

ஒரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே கிடந்தன.

பல வருடங்களாக ஒரே இடத்தில் மழையில் ஊறி, வெய்யிலில் வாடிக் கிடந்த அந்தக் கற்களுக்கு ரொம்பச் சலிப்பாக இருந்தது. ‘நாம் எப்போதாவது இங்கிருந்து நகர்வோமா?’ என்று மிகவும் ஏக்கத்தோடு பேசிக்கொண்டன.

அந்தக் காட்டுக்குப் பக்கத்தில் ஒரு நகரம். அங்கிருந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கோவில் கட்டத் தீர்மானித்தார்கள்.

புதுக் கோவிலுக்கு மூலவர், உற்சவர், மற்ற சிலைகள் எல்லாம் வேண்டுமல்லவா? அதற்காக ஏழெட்டு சிற்பிகள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சிற்பங்களைச் செதுக்குவதற்கான கற்களைத் தேடிக் காட்டுக்குள் வந்தார்கள்.

அவர்களில் ஒரு சிற்பி இந்தப் பாறைகளைக் கவனித்தார். மற்றவர்களிடம் அவற்றைக் காண்பித்துச் சொன்னார். ‘இந்தப் பாறைங்க ரெண்டும் சரியான அளவில இருக்கறமாதிரி தெரியுது. நாளைக்கே ஆள் வெச்சுத் தூக்கிட்டுப் போயிடலாம்!’

சிற்பிகள் திரும்பிச் சென்றபிறகு முதல் பாறை பேசியது. ‘ஹையா ஜாலி ஜாலி! நம்ம பல நாள் கனவு நிறைவேறப் போகுது! நாளைக்கு நாம நகரத்துக்குப் போறோம்!’

இரண்டாவது பாறை கோபமாகச் சீறியது. ‘அட மக்குப் பயலே! அவங்க உனக்கு நகரத்தைச் சுத்திக்காட்டறதுக்கா கூட்டிகிட்டுப் போறாங்கன்னு நினைச்சே? உன்னை அடிச்சு உடைச்சு செதுக்கி, சிலையா மாத்திப்புடுவாங்க. தெரியுமா?’

‘அதுக்கு என்ன பண்றது? ஒண்ணைப் பெறணும்ன்னா இன்னொண்ணை இழந்துதானே ஆகணும்?’ என்றது முதல் பாறை. ‘நான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்னையில்லை!’

‘என்னால அது முடியாது!’ தீர்மானமாகச் சொன்னது இரண்டாவது பாறை.

‘நாளைக்கு அவங்க வரும்போது நான் இன்னும் ஆழமாப் போய் உட்கார்ந்துக்குவேன். அவங்க எல்லோரும் சேர்ந்து எவ்ளோ கஷ்டப்பட்டாலும் என்னைத் தூக்கமுடியாது.’

மறுநாள் அந்தச் சிற்பிகள் மீண்டும் வந்தார்கள். முதல் பாறையைக் கட்டித் தூக்கி வண்டியில் வைத்தார்கள். இரண்டாவது பாறையை அவர்களால் அசைக்கக்கூட முடியவில்லை.

‘சரி விடுங்க. அதான் ஒரு பாறை கிடைச்சுடுச்சே. அதுவே போதும்.’ அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.


இப்போது அந்த முதல் பாறை அற்புதமான கடவுள் சிலையாக எல்லோராலும் வணங்கப்படுகிறது. இரண்டாவது பாறை இன்னும் காட்டுக்குள்தான் கிடக்கிறது.

இன்றைய செய்தி துளிகள்:

1.வாரணாசியில் நாளை பள்ளி மாணவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார் பிரதமர் மோடி

2.வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

3.கல்லூரி படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமானது! பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

4.அமைச்சர் என்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்னை பாதிக்கவில்லை - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே

5.போலந்து குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலம் வென்றார்.

1 comment:

  1. முறைகேடால் முடங்கிய டி.ஆர்.பி., தேர்வுகள் டி.என்.பி.எஸ்.சி.,யிடம் பணியை ஒப்படைக்க கோரிக்கை



    ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த தேர்வுகள், உரிய தேதியில் நடத்தப்படாமல், பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், தேர்வு பணிகளை, டி.என்.பி.எஸ்.சி., யிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.


    அரசு பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக்களில், ஆசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை நியமிக்க, டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரியமானது, தேர்வு பணிகளை மேற்கொள்கிறது.பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், டி.ஆர்.பி., நடத்திய, பல தேர்வுகளில் பிரச்னைகள் ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்துள்ளன.


    அத்துடன், தேர்வுகளில் முறைகேடு 
    நடந்ததாகவும், புகார்கள் எழுந்துள்ளன. அதற்கேற்ற வகையில், அரசு கல்லுாரி விரிவுரையாளர் பணிக் கான தேர்வில், 200க்கும் மேற்பட்ட தேர்வர்களின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு, தரவரிசையில் அவர்கள் முன்னிலை பெற்றனர். இதை, மற்ற தேர்வர்களே கண்டுபிடித்து, டி.ஆர்.பி.,க்கு புகார் எழுதியதால், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.


    அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்விலும், 200 பேரின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதில் விசாரணை நடந்தபின், எட்டு பேரின் விடை தாள்களில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு உள்ளது.இந்தப் பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யின் ஆண்டறிக்கையில் அறிவிக்கப்பட்ட, அனைத்து தேர்வுகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வேளாண் பயிற்றுனர் பதவிக்கு, 25 காலியிடங் களுக்கு, ஜூலை, 14ல் தேர்வு அறிவிக்கப்பட்டும் நடக்கவில்லை.


    அரசு பாலிடெக்னிக்விரிவுரையாளர் பணிக்கு, ஆக., 4ல் அறிவிக்கப்பட்ட தேர்வும் நடைபெறவில்லை. அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு, 1,883 காலியிடங்களுக்கு, ஜூனில் நடத்த வேண்டிய தேர்வு; உதவி தொடக்க கல்வி அதிகாரி பணிக்கு, 57 இடங்களுக்கு, செப்., 15ல் நடத்தப்பட வேண்டிய தேர்வும் நடத்தப்படவில்லை. அதேபோல, ஆசிரியர் 
    தகுதி தேர்வு, அக்., 6ல் நடத்தப்படும் என்றும், இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த அறிவிக்கையும் வெளியாக வில்லை.


    இப்படி எல்லா தேர்வுகளும் நடத்தப்படாமல் முடங்கி கிடப்பதால், கல்வி துறையில் காலியிடங்கள் அதிகரித்து, பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. எனவே, முறைகேடு பிரச்னைகளை களையும் வரை, டி.ஆர்.பி.,யின் தேர்வு பணிகள் அனைத்தையும், டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என, கல்வியாளர்களும், பட்டதாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி