’நூலக ஆர்வலர் விருது - 2018' அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2018

’நூலக ஆர்வலர் விருது - 2018' அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்!



வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் கடந்த ஏழாண்டுகளாகச்
சிறப்பான முறையில் நூலக வளர்ச்சிக்கு உறுதுணையாக பல்வேறு செயல்பாடுகளைச்
செய்தமைக்காக நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ்-க்கு தமிழக
அரசின் பொது நூலகத் துறை சார்பில்‘நூலக ஆர்வலர் விருது - 2018’ வழங்கப்பட்டது.

           தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில்
நூலக வளர்ச்சிக்காக  சிறந்த முறையில் செயல்படும் நூலக வாசகர் வட்டத்திற்கு
‘நூலக ஆர்வலர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

          2018-ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா கடந்த நவம்பர்-14-ஆம் தேதி
சென்னை சேத்துப்பட்டிலுள்ள எம்.சி.சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

         இவ்விழாவிற்கு தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை
ஏற்றார். பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் முன்னிலை வகித்தார்.
பள்ளிக்கல்வித் துறை மற்றும் பொது நூலகத் துறை இயக்குநர் இராமேஸ்வர முருகன்
முன்னிலை வகித்தார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் து.ஜெயக்குமார் வாழ்த்துரை
வழங்கினார். 

         திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் கடந்த 2011-ஆம்
ஆண்டு நூலக வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது. இந்த வாசகர் வட்டத்தின் தலைவராக
தேர்வு செய்யப்பட்ட கவிஞர் மு.முருகேஷ் தலைமையின் கீழ், தொடர்ந்து மாதந்தோறும்
‘சந்திப்பு’ எனும் நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்திப்பு நிகழ்வில்,
நூல் அறிமுகம், நூல் வெளியீடு, நூல் திறனாய்வு,  பல்துறை வல்லுநர்களின் உரையரங்கு
என தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ரூ.1,000/- செலுத்திய 7 நூலகப் புரவலர்கள் மட்டுமே
இந்த கிளை நூலகத்தில் இன்றைக்கு 190 நூலகப் புரவலர்கள் சேர்ந்திருக்கிறார்கள். ரூ.5,000/-
செலுத்தி, 4 பெரும் புரவலர்கள் இணைந்திருக்கிறார்கள். புதிதாக 8 ஆயிரம் நூலக உறுப்பினர்கள்
சேர்ந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன்
அவர்களின் பிறந்த நாள் விழா, தேசிய நூலக வார விழா, உலகத் தாய்மொழி நாள் விழா,
நூலகத்திலேயே சிறப்புத் தள்ளுபடியுடன் ஒரு வார காலம் புத்தகக் கண்காட்சி, பள்ளி மாணவ-
மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, பட்டுப் போட்டிகள் நடத்தி
பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

          நூலகத்திற்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், சோலார் மின்விளக்கு,
20 பிளாஸ்டிக் நாற்காலிகள், 4 மர நாற்காலிகள், இரும்பு பீரோ ஒன்றும் நகர முக்கிய
பிரமுகர்களிடமிருந்து நன்கொடை மூலமாக வாங்கப்பட்டுள்ளன. ரூ.30,000/- மதிப்பிலான
நூல்களும் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன.

           மேற்கண்ட செயல்பாடுகளை ஒர்ங்கிணைத்து செயல்பட்டமைக்காக நூலக வாசகர் வட்டத்
தலைவர் கவிஞர் மு.முருகேஷ்-க்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் ‘நூலக ஆர்வலர் விருது - 2018’ விருதினை வழங்கிக் கெளரவித்தார்.

         இவ்விழாவில், திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் ரா.கோகிலவாணி, நல்நூலகர்
விருதுபெற்ற வந்தவாசி அரசுக் கிளை நூலகர் பூ.சண்முகம், திருவண்ணாமலை மாவட்ட நூலகர்
வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி