பனிக்கால பாதிப்புகள் குழந்தையை பாதுகாப்போம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2018

பனிக்கால பாதிப்புகள் குழந்தையை பாதுகாப்போம்!



தாயின் கருவறையில் 10 மாதம் பாதுகாப்பாக வைத்திருப்பதை விட குழந்தைகள் பிறந்தபின் வளர்த்து ஆளாக்குவதுதான் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.

குறிப்பாக குழந்தைகள் ஒரு வயது வரை எதற்காக அழுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் அதிகம். அப்போது, வீட்டிலிருக்கும் பாட்டிகள்தான் இதனை கண்டறிந்து குழந்தைகளின் அழுகையை நிறுத்தி தாயின் பரிதவிப்புக்கு பரிகாரம் தருவார்கள். அவ்வாறு பாட்டிகள் தரும் வைத்தியம் குறித்து பார்ப்போம்:

* வயிற்று வலியால் துடிக்கும் 5 மாத குழந்தையின் வயிற்று மீது கடுக்காயை சந்தனம் மாதிரி உரசி பூசலாம். அல்லது ஒரு  வெற்றிலையை விளக்கில் காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுடன் குழந்தையின் வயிற்றில் போட்டால் 2 நிமிடங்களில் வயிற்று  வலி நீங்கும்.

* சில குழந்தைகளுக்கு வாயில் மாவு மாதிரி வெள்ளை படிந்திருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்லில் உரசி அதன் விழுதை  குழந்தையின் நாக்கில் தடவினால் சரியாகும்.

* குழந்தைகள் வாந்தி எடுத்தால், வசம்பை சுட்டு பொடி செய்து ஒரு ஸ்பூன் தாய்ப்பாலில் கலந்து, நாக்கில் தடவினால் குணமாகும்.

* சூடு காரணமாக குழந்தைக்கு மலஜலம் தண்ணீராக செல்லும். அப்போது,  ஜாதிக்காயை கல்லில் உரசி தாய்ப்பாலில் கலந்து கொடுத்தால் உடனடி குணமாகும். 3 வேளையும்  இப்படிக்கொடுத்தால் முழுவதும் குணமாகிடும். ஆனால் இதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது என்ன வென்றால் ஜாதிக்காயை  இரண்டு உரைக்கு மேல் உரைக்கக் கூடாது.  அதிகமானால் குழந்தைக்கு மயக்கம் வரும்.

* ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்குவை தலா ஒன்று எடுத்து வேகவைத்து, அதை  வெயிலில் காய வைக்கவேண்டும்.  குழந்தையை தலைக்கு குளிப்பாட்டுகிறபோது இவற்றை சந்தனக்கல்லில் ஒருமுறை மட்டுமே உரசி ரெண்டு  டேபிள்ஸ்பூன் தாய்ப்பாலில் கலந்து கொடுத்தால் குழந்தைக்கு மாந்தம், உப்புசம் வராமல் தடுக்கும்.

* 6 மாத குழந்தைகளுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை, ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் ஆகியவற்றை நன்றாக அரைத்து, வெந்நீரில்  கலந்து, ஒரு பாலாடை அளவு குடிக்க வைத்தால் குழந்தையின் வயிற்றில் வாயு சேராது.

* குழந்தையின் தலையிலும், உடம்பிலும் தேய்க்க சுத்தமான தேங்காய் எண்ணெயை காய வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் விட்டு அது  கொதித்து அடங்கியதும் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியை போட்டு இறக்கி வைத்துக்கொள்ளலாம். குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை இந்த எண்ணெயை தேய்த்து பாசிப்பயறு மாவு  தேய்த்து குளிக்க வைக்கணும். இவ்வாறு செய்தால் குழந்தை உடம்புல சொறி, சிரங்கு வராது.

* தற்போதுள்ள மார்கழி பனியில் கைக்குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்கும். அப்படி சளித்தொல்லையால் குழந்தை அவதிப்பட்டால், கால் ஸ்பூன் விளக்கெண்ணெயில், 2  பல் பூண்டை போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பாலில் கலந்து, 2 டேபிள் ஸ்பூன் கொடுத்தால் சளி வெளியாகிவிடும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி