பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை தேர்வுக்கான புதிய மதிப்பெண் முறையில் வினாத்தாளை மாற்றி அமைத்துள்ளது. இதனால் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் கலக்கத்தில் உள்ளதால், தேர்ச்சி சதவீதம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 1ம் தேதி துவங்குகிறது. இதற்காக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக மாணவ, மாணவிகள் தங்களை பொதுத்தேர்வுக்கு தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர். கடந்த காலாண்டு, அரையாண்டு மாதிரி வினாத்தாள்களை அடிப்படையாக கொண்டு, மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வந்தனர். தற்போது பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு புதிய மதிப்பெண் முறையில் வினாத்தாள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய வடிவமைப்பில் மாதிரி வினாத்தாளை பள்ளி கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.
மாற்றி அமைக்கப்பட்ட பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை இணையதளத்தில் பார்த்த மாணவ, மாணவிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். பிளஸ் 2 தேர்வில் இம்முறை எப்படித்தான் பாஸ் ஆக போகிறோமோ என்ற புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறும்போது, ‘‘காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள், பழைய மாதிரி வினாத்தாள்களை வைத்தே தேர்வுக்கு தயாராகி வந்தோம். தற்போது பொதுத்தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், புதிய மதிப்பெண் முறையிலான வினாத்தாளில் தான் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்பது என்ன நியாயம்? இது எங்களுக்கு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு எப்படி தேர்வு எழுதி தேர்ச்சி பெறப்போகிறோம் என்றே தெரியவில்லை” என்றனர்.
Padichavan minister a iruntha ippadi last minute la question paper change vanthirukkuma.think and vote
ReplyDeletechange pannurathu kalvi thurai, amaichar illa,
Delete