தேர்தல், கல்வி பணிச்சுமையால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு: எஸ்எஸ்ஏ திட்டப் பயிற்சியை அரசு தள்ளிவைக்க வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2019

தேர்தல், கல்வி பணிச்சுமையால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு: எஸ்எஸ்ஏ திட்டப் பயிற்சியை அரசு தள்ளிவைக்க வலியுறுத்தல்


தேர்தல் மற்றும் கல்விப் பணிச் சுமை காரணமாக எஸ்எஸ்ஏ திட்டப் பயிற்சியை இயக்குநரகம் அடுத்த கல்வி ஆண்டில் வைக்க வேண்டும் என்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்கி மே 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப் படுகிறது. அதனுடன் 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தமிழக பள்ளிக் கல்வியில் பொதுத்தேர்வு நடை பெறும் 10, 11, 12-ம் வகுப்புகளை தவிர்த்து எஞ்சிய அனைத்து மாணவர்களுக்கும் ஏப்ரல் 3-வது வாரம் வரை பள்ளிகள் இயங்கு வது வழக்கம். அதன்படி நடப்பு கல்வியாண்டு ஏப்ரல் 20-ம் தேதி கடைசி பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தல் காரணமாக மாணவர்கள் கல்வி பாதிக்காத வண்ணம் பள்ளி வேலைநாட்களை ஏப்ரல் 13-ம் தேதியுடன் முடிக்க வேண்டும். வேலை நாட்கள் இழப்பை சனிக்கிழமைகளில் ஈடு செய்து, ஆண்டு இறுதித் தேர்வு களையும் முன்பே நடத்தி முடிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டது.


இதையடுத்து தமிழகம் முழுவ தும் கடந்த 2 வாரங்களாக ஆரம்பப் பள்ளிகள் சனிக்கிழமைகளிலும் இயங்கி வருகின்றன. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் களுக்கு தேர்தல் பயிற்சி வழங்கப் படுகிறது. இவ்வாறு ஓய்வின்றி இடைவிடாது பணி செய்ய வேண்டிய கட்டாயம் ஆசிரியர் களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் ஆசிரியர்களுக்கு கல்வித் திட்ட பயிற்சியும் தரப்படுவதால் பணிச்சுமையால் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் தலைவர் மோசஸ் கூறிய தாவது: ஏப்ரல் 13-க்குள் அனைத்து பாடங்களையும் முடித்து, இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்தி, பள்ளி வேலை நாட்களை முடிக்க வேண்டும்.


இதுதவிர ஆண்டு விழாக்கள், விளையாட்டுப் போட்டிகளையும் நடத்த வேண்டும். இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு, அடுத்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை உட்பட இதர ஆவணங் கள் தயாரிப்பு பணிகளும் உள்ளன. மேலும், தேர்தல் பயிற்சிகள் என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு தேர்வு வைத்து தேர்தல் ஆணையம் சங்கடப்படுத்துகிறது. இதற்கே வாரம் முழுவதும் உழைக்க வேண்டியுள்ளது. இந்தச் சூழலில் மாநில திட்ட இயக்குநரகம் எஸ்எஸ்ஏவின்கீழ் ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி பயிற்சி தருவது ஏற்புடையதல்ல. மாநிலத்தில் 70 சதவீத ஆரம்பப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவே உள் ளன. ஒருவர் பயிற்சிக்கு சென்று விடுவதால் மற்றொருவர் அந்தப் பணிகளை சமாளிக்க முடியாத நிலையே நீடிக்கிறது. கல்வித்துறை தரும் அந்த பயிற்சியும் பயனுள் ளதாக இல்லை. எனவே, வாரம் முழுவதும் ஓய்வின்றி உழைக்கும் ஆசிரியர் கள் மற்றும் மாணவர்களின் கல்வி நலன் கருதி எஸ்எஸ்ஏ திட்டப் பயிற்சியை அடுத்த கல்வி ஆண்டு தொடக்கத்தில் வைக்க இயக்குநரகம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி