அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் பெரிய அளவில் முறைகேடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2019

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் பெரிய அளவில் முறைகேடு!


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. பள்ளி மேலாண்மைக் குழுக்களை சிதைக்கும் வகையில் கல்வித்துறை அதிகாரிகள் செயல்படுவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 27,895 ஆரம்பப் பள்ளிகள், 9,134 நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 28 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளுக்கு வளர்ச்சிப்பணிகளுக்கென மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

தாமதம் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்க இப்போது திட்டநிதியானது நேரடியாக பள்ளியின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படுகிறது. அதைக் கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை மேலாண்மைக் குழுக்கள் மூலம் தலைமை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடப்பு ஆண்டு மத்திய அரசு நிதியில் உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ச.மயிலு கூறியதாவது:

ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்மூலம் மத்திய அரசு, அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கும் நிதியை மேலாண்மைக் குழுக்கள் மூலமேபயன்படுத்த முடியும். இதற்கிடையே நடப்பு ஆண்டில் அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்காக பள்ளிக்கு தலா ரூ.10,000 தரப்பட்டது.நிதி ஒதுக்கப்பட்டதும் கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களை அழைத்து, குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து வரும் புத்தகங்களை வாங்கிவிட்டு, ரூ.9,500-க்கு காசோலை போட்டுத்தர வேண்டும். இதை மேலாண்மைக் குழுக்கள் மூலம் தீர்மானம் போட்டு வாங்கியதாக கணக்கு காட்ட வேண்டும் என நிர்பந்தம் செய்தனர்.அதன்படி திருப்பூர், சேலம்,கோவை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சில தனியார் நிறுவனங்கள் புத்தகங்களைத் தந்துவிட்டு காசோலையை வாங்கிச் சென்றனர். ஆனால், அந்தபுத்தகங்களின் மதிப்பு அதிகபட்சம் ரூ.5,000 வரையே இருக்கும்.

இதுதொடர்பாக விசாரித்தபோது மாநிலம் முழுவதும் இதேபோல் எல்லா பள்ளிகளிலும் குறிப்பிட்ட சில நிறுவனங்களே புத்தகங்களை வழங்கி பணம் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து மாணவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்க ஆரம்பப் பள்ளிக்கு ரூ.4,000, நடுநிலை பள்ளிக்கு ரூ.8,000 ஒதுக்கப்பட்டன.இதற்கும் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சில தனியார் நிறுவனங்கள் கிரிக்கெட் பேட், கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 14 வகையானபொருட்களை விநியோகம் செய்துவிட்டு காசோலை வாங்கிச் சென்றனர். அதன் மதிப்பு1,700 ரூபாயைத் தாண்டாது. ஆனால், அந்தப் பொருட்களை8,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக கணக்கு காட்டுகின்றனர். அவை தரமற்றதாகவும் உள்ளன.ஓரிரு முறை பயன்படுத்தியதற்கே சேதமடைந்துவிட்டன. மதுரை, சேலம், துாத்துக்குடி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளுக்கு இத்தகைய தரமற்ற பொருட்களே விநியோகிக்கப்பட்டுள்ளன.

தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு ஆங்கில உபகரணப்பெட்டி வாங்க பள்ளிகளுக்கு தலாரூ.6,000 தரப்பட்டது. அதிலும் சிலதனியார் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்தஉபகரணப் பெட்டிகள் 1,000 ரூபாய்கூட இருக்காது. இவ்வாறு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள் கொள்முதலில், துறை அதிகாரிகள் துணையுடன் மத்திய அரசு நிதியில் 50 சதவீத அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக பொருட்களைக் கொள்முதல் செய்யும்போது சராசரியைவிட அதன் விலையைக் குறைத்து வாங்க முடியும். அதற்குநேர்மாறாக அதிகாரிகள் காட்டும்கணக்கு இருக்கிறது. இதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் பள்ளி மேலாண்மைக் குழு மூலமேபொருட்கள் வாங்கப்பட்டுள்ளதால் தலைமை ஆசிரியர்தான் பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் தப்பித்துக் கொள்வார்கள்.நன்கு திட்டமிட்டு இத்தகைய செயல்பாடுகளை அரங்கேற்றி வருகின்றனர்.

 மேலும், பள்ளியின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட மேலாண்மைக் குழுக்களை சிதைக்கும் வகையில் கல்வித்துறை அதிகாரிகள் செயல்பாடுகள் இருப்பது வேதனையாக உள்ளது. அதிகாரிகள் வாய்மொழி உத்தரவுகளாகவே இதை செய்து வருகின்றனர். அதற்கு ஒப்புதல் கடிதம் கேட்டால் வேறுவிதமாக தொல்லைகள் வருவதால் தலைமை ஆசிரியர்கள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.துறையின் மேல்மட்டத்தில் தொடங்கி அனைத்து அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவே தகவல்கள் வருகின்றன. மாணவர்கள்நலன் சார்ந்த திட்டங்களின் நிதியில் முறைகேடு செய்வதை ஏற்க முடியாது.

இந்தவிவகாரம் குறித்து அரசு நியாயமான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி