அரசு பள்ளியில் படித்த தையல் தொழிலாளி மகள் ‘நீட்’ தேர்வில் 605 மதிப்பெண் எடுத்து சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2019

அரசு பள்ளியில் படித்த தையல் தொழிலாளி மகள் ‘நீட்’ தேர்வில் 605 மதிப்பெண் எடுத்து சாதனை


அரசு பள்ளியில் படித்த தையல் தொழிலாளியின் மகள், நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.2019-20-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதிநடைபெற்றது.

இதில் நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் எழுதினா். இத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அரசு பள்ளியில் படித்த தையல் தொழிலாளியின் மகளானஜீவிதா, இத்தேர்வில் 605 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

சென்னையை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த தையல் தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவரின் மகள்தான் ஜீவிதா. பன்னீர்செல்வத்துக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தனது 3 மகள்களையும் அனகாபுத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கவைத்தார். இதில் ஜீவிதாகடந்த 2015-ம் ஆண்டு, 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்றார். இதைத்தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் 1,161 மதிப்பெண்கள் பெற்றார்.மருத்துவராக விரும்பிய ஜீவிதா, பிளஸ் 2 படிக்கும்போதே நீட் தேர்வுக்கும் தன்னை தயார் படுத்திக்கொண்டார்.

 இதற்காக சில மாதங்கள் டியூஷனுக்கு சென்ற இவர், அதன்பிறகு ஃபீஸ் கட்ட பணம் இல்லாததால் வீட்டில் இருந்தபடி சொந்த முயற்சியில் நீட்தேர்வுக்கு படித்தார். நூலகத்தில் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் புத்தகத்தை இரவல் வாங்கிப் படித்து நீட் தேர்வுக்கு இவர் தயாரானார்.இந்நிலையில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 605 மதிப்பெண் எடுத்துள்ள ஜீவிதா, அகில இந்திய அளவில் 6,678-வது இடத்தையும், ஓபிசி பிரிவில் 2,318-வது இடத்தையும் பிடித்துள்ளார். தமிழகத்தில் இவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரி விக்கின்றனர்.

இதனிடையே நீட்தேர்வில் ஜீவிதா வெற்றி பெற்றாலும் கட்டணம் செலுத்த என்ன செய்வது என குடும்பம் தவித்து வருகிறது.இதுகுறித்து ஜீவிதா கூறும்போது, “எனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. எங்கள் அப்பா ஒரு தையல் கடையில் வேலை செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தில் படிக்க வைத்தார். ஏழை குடும்பத்தில் பிறந்ததால் மருத்துவராக முடியுமா? என பல நாட்கள் நினைத்துள்ளேன். என் அப்பா, அம்மா மற்றும் ஆசிரியர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தனர்.

இதன் விளைவாக நான் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளேன்” என்றார்.ஜீவிதாவின் தாயார் பவானி கூறும்போது, “சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்று ஜீவிதா அடிக்கடி கூறுவார். அதற்குநான், ‘நன்றாகப் படித்தால் மருத்துவர் ஆகலாம். மற்றபடி அதற்காக எங்களால் செலவு செய்ய முடியாது’ என்று கூறிவந்தேன். இதை வைராக்கியமாக கொண்டு ஜீவிதா நல்லமுறையில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

6 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி