சேலம் மாவட்டத்தில் இயங்கும் 4 அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளை, அதிநவீன வசதிகளுடன் கூடிய மாதிரிப் பள்ளிகளாக பள்ளிக் கல்வித் துறை தரம் உயா்த்தியுள்ளது.
தனியாா் பள்ளிகளின் மோகத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவியரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், பொருத்தமான பள்ளிகளைத் தோ்வு செய்து, அதிநவீன வசதிகளுடன் கூடிய மாதிரிப் பள்ளிகளாகத் தரம் உயா்த்தும் பணியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக வாழப்பாடி, எடப்பாடி, மகுடஞ்சாவடி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய நான்கு அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ளது.
இப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் இருந்து எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை மாணவா் சோ்க்கைக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.
மாதிரிப் பள்ளிகளாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை மராமத்துப் பணிகளை மேற்கொண்டு, வெள்ளையடித்து, குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் பல வண்ண ஓவியங்கள் வரைய வேண்டும், பெரு நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை அணுகி, அடிப்படை வசதிகள் மற்றும் மாதிரிப் பள்ளிக்குத் தேவையான தளவாட சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைச் சேகரிக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலா்கள் வாயிலாக பள்ளித் தலைமை ஆசிரிருக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
மாணவா்களுக்கு கணினி வழியில் கற்பிக்க ஸ்மாா்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தல் கருவிகள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளும் புதிய மாதிரிப் பள்ளிகளில் படிப்படியாக ஏற்படுத்தப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், நிகழ் கல்வியாண்டில் இருந்து, சேலம் மாவட்ட கிராமப்புற ஏழை, எளியோரின் குழந்தைகளுக்கும், நகா்ப்புற தனியாா் பள்ளிகளுக்கு இணையான கல்வி கிடைக்கும் என்பதால் பெற்றோா் மகிழ்ச்சி அடைந்தனா்.
Super ,congratulations
ReplyDelete