முழுநேர பணிக்கு வற்புறுத்தல்; பகுதிநேர ஆசிரியர்கள் புலம்பல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2014

முழுநேர பணிக்கு வற்புறுத்தல்; பகுதிநேர ஆசிரியர்கள் புலம்பல்.


திருப்பூரில் உள்ள சில பள்ளிகளில், முழுநேரம் பணியாற்ற வற்புறுத்துவதாக, பகுதி நேர ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளிகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை போக்கும் வகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், தமிழகம் முழுவதும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

ஓவியம், இசை, தையற்கல்வி மற்றும் உடற்கல்வி சார்ந்த பாடங்களை, சிறப்பு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம், மாதம் 12 நாட்கள்அவர்கள், கட்டாயம் பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில்,அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக 543 பேர் பணியாற்றுகின்றனர். சில பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. சில பள்ளிகளில் மருத்துவ காரணங்களுக்காக நீண்ட விடுப்பில், ஆசிரியர்கள் சென்றுவிடுவதால், மாதக்கணக்கில், அப்பணியிடம் காலியாக உள்ளது. பள்ளியில் கூடுதல் ஆசிரியர் இருக்கும்பட்சத்தில், அங்கு மாற்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி, "சிலபஸ்' முடிக்கின்றனர். போதிய ஆசிரியர் இல்லாத பட்சத்தில், பாடம் கற்பிப்பது தடைபடுகிறது.அவ்வாறான சில பள்ளிகளில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை, வகுப்பறையில் பாடம் நடத்துமாறு, தலைமை ஆசிரியர்கள் வற்புறுத்துகின்றனர். ஓரிரு ஆசிரியர்கள் ஆர்வமுடன் பாடம் நடத்த முன்வந்தாலும், பகுதிநேர ஆசிரியர்களில் பலரும், அதை விரும்புவதில்லை. விருப்பமில்லாத ஆசிரியர்களை, பாடம் நடத்துமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாக, புகார் எழுந்துள்ளது.உடற்கல்வி, தையல், ஓவியம், இசை போன்றவற்றில் மட்டுமே, பகுதிநேர ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளது; அவர்கள் வகுப்பறையில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம் சார்ந்த பாடங்களை நடத்துவதற்கு போதிய பயிற்சியோ, அனுபவமோ இல்லை. மாணவர்களுக்கு புரியும் விதமாக, அவர்களால் எளிதாக பாடம் கற்பிப்பதும் கடினம். பகுதிநேர பணிக்கு வரும் தங்களை, முழுநேர பணிசெய்ய வற்புறுத்துவதாக, சிறப்பு ஆசிரியர்கள் பலரும் புலம்புகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி