மெத்தனம் நீங்குவது எப்போது? - அவதிப்படும் பட்டதாரிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2013

மெத்தனம் நீங்குவது எப்போது? - அவதிப்படும் பட்டதாரிகள்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் புதிய பாட திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதற்கான "இணையான சான்று" அளிப்பதில் மெத்தன போக்கு காட்டப்படுவதால், அந்த பாடங்களை படித்து வேலைக்கு காத்திருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., என இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில், பழைய பாடத் திட்டங்களில், நவீன காலத்திற்கு ஏற்ப புதிய சில பகுதிகளை சேர்த்து, பி.காம்., எம்.காம்., (சி.ஏ.,), பி.ஏ., (டூரிஸம்), பி.பி.இ., (வணிக பொருளியல்), பி.ஏ., கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம் என்று அரசு மற்றும் பல தனியார் கல்லூரிகள், புதுப்புது பாடங்களை அறிமுகப் படுத்துகின்றன. இவற்றைப் படித்தால் எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி பல மாணவர்கள் அந்த பாடங்களை தேடிச் சென்று படிக்கின்றனர்.இதற்கு, அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடங்களுக்கு, பழைய பாடத்திட்டத்துக்கான "இணையான சான்று" பெற்று, அதற்கு அரசு அங்கீகாரம் பெற வேண்டும். ஆனால், பல கல்லூரிகள் இந்த விஷயத்தில் மெத்தனப் போக்காக நடந்து கொள்கின்றன.இதனால், போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று, வேலைக்கு செல்லும் போது, அரசு அங்கீகாரம் இல்லை என்று, அப்பாடங்களை படித்த மாணவர்களை புறக்கணிக்கும் போக்கு, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நடந்துமுடிந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஏராளமானவர்கள், இந்த வகை சர்ச்சையில் சிக்கி, வேலைக்கு செல்லமுடியாமல் தவிப்பது, உயர்கல்வி துறையில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, மதுரை அரசு கல்லூரி ஒன்றில், பி.ஏ., ஆங்கில இலக்கியத்துக்கு பதில், "தொடர்பியல் ஆங்கிலம்" என்ற பெயரில் படித்த 17 பேர், டி.ஆர்.பி., நடத்திய உதவி தொடக்க கல்வி அலுவலர், ஆசிரியர் தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்றும், அவர்களுக்கு வேலைகிடைக்கவில்லை. அதேபோல், மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட பல கல்லூரிகளில் பி.ஏ., பொருளியல் பாடத்துக்கு பதில், பி.பி.இ., (வணிக பொருளாதாரம்) படித்த, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பெற்றி பெற்ற, மதுரையை சேர்ந்த 31 பட்டதாரிகளையும், டி.ஆர்.பி., இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.இதுகுறித்து டி.ஆர்.பி., தரப்பில் கூறுகையில், "எங்களுக்கு அரசுவழங்கிய அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் லிஸ்ட்டில் இந்த பாடங்கள் இல்லை" என்று பதில் அளித்துள்ளது.இதுகுறித்து கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் சிலர் கூறியதாவது: புதிய பாடத்திட்டங்கள் துவங்கியதும், "இணையான சான்று" பெற சம்பந்தப்பட்ட பல்கலைக்கு விண்ணப்பித்து விடுகிறோம். பல்கலை கல்வி குழுவில் (போர்டு ஆப் ஸ்டடீஸ்) ஒப்புதல் பெற்று, இணையான சான்று பெற்று, அதை தமிழ்நாடு உயர்கல்வி கவுன்சிலுக்கு கொண்டு சென்று, அரசு அங்கீகாரம் பெற வேண்டும்.பின், போட்டித் தேர்வுகள் மூலம், பணியாளர்களை தேர்வு செய்யும் டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., போன்ற அமைப்புகளுக்கு அந்த"லிஸ்ட்" அனுப்பிவைக்கப்படும்.  ஆனால், பல பாடத்திட்டங்களுக்கான அங்கீகார மனுக்கள், தமிழ்நாடு உயர்கல்வி கவுன்சிலில் "பெண்டிங்" போடப்பட்டு விடுவதால் தான், இப்பிரச்னை ஏற்படுகிறது.மதுரையில் இருந்து மட்டும் 15 கோர்ஸ்களுக்கான அங்கீகாரத்துக்கு பல கல்லூரிகள் காத்திருக்கின்றன என்றனர். வரும் காலங்களில் மாணவர்கள் நலன் கருதி, இதற்கான அங்கீகாரம் உடனடியாக  அளிக்கப்பட்டு, அந்த லிஸ்ட்டை டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., போன்ற அமைப்புகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்கின்றனர், கல்லூரி முதல்வர்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி